போலிச் செய்தி வெளியிட்ட Poli Talk.. மனு தர்ம சாஸ்திரத்தில் சூத்திரர்கள் வே..மகன் எனக் கூறவில்லையா ?

சமீபகாலங்களாக இந்துக்களே ஒன்றுக் கூடுங்கள் என வலதுசாரிகளால் எழுப்பப்படும் கோசங்களுக்கு எதிர்வினையாக வர்ணாசிரமத்தின் நான்குப் பிரிவுகளில் ஒன்றான சூத்திரங்கள் பற்றி மனு தர்ம சாஸ்திரத்தில் கூறியவைகள் தொடர்ந்து பேசுப் பொருளாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்துக்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சிற்கு பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையில், Poli Talk எனும் யூடியூப் சேனலில் வெளியான 3 நிமிட வீடியோ காட்சி வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Archive link 

அந்த 3 நிமிட வீடியோவில், ” ஆ.ராஜா பேசியது போல் மனு தர்ம சாஸ்திரத்தின்(மனுஸ்மிருதி) அத்தியாயம் 8-ல் 415வது ஸ்லோகத்தில் எங்கையாவது சூத்திரர்கள், பிராமணர்கள் என்ற வார்த்தை வருகிறதா என்று பாரு. அதில்தான், சூத்திரன் என்ற வார்த்தையே இல்லையே ” எனக் கூறி விட்டு வில்லியம் ஜோன்ஸ் பற்றி பேசி இருக்கிறார்கள்.

வைரல் செய்யப்படும் வீடியோவில் ஆதாரமாக காண்பிக்கப்பட்டு இருக்கும், ” மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உறையும் முழுவதும்) ” என்ற புத்தகம், பிரம்மா பீடம் இளைய பீடாதிபதி அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா என்பவரால் உரை எழுதப்பட்டு ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ஆல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் முதல் பதிப்பே 2011-ல் தான் வெளியாகி இருக்கிறது.

இந்த புத்தக்கத்தில் காண்பிக்கப்பட்ட அத்தியாயம் 8-ல் 415வது ஸ்லோகத்தில், ” ஏவலர்கள் ஏழு வகையினர், போரில் சிறைப்பிடிக்கப்பட்டவன், பக்தியோடு தொண்டு புரிய வந்தவன், வைப்பாட்டியின் மகன், விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமை, பிறரால் கொடுக்கப்பட்ட அடிமை, பரம்பரையாக பணி செய்பவன், அபராதத் தொகையை வேலை செய்து தீர்ப்பவன் என்னும் ஏழு வகையினர் ஏவலர்களாவர்” என இடம்பெற்று உள்ளது.

ஆனால், ஏவலர்கள் என யாரைக் குறிப்பிடுகிறார்கள் எனப் பார்த்தால் அதே புத்தகத்தில் அத்தியாயம் 2-ல் ஸ்லோகம் 31-ல் ” சூத்திரர்களுக்கு ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோகம் 32-க்கிற்கான விளக்கத்தில், “ சூத்திரன் பிராம்மண சத்ரிய வைசியர்களுக்கு பணிபுரிபவன் என்பதால் இவன் பெயரோடு தாசன் என்ற பதம் சேர்க்கப்பட வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்துள்ளனர்.

மேற்காணும் புத்தகத்திலேயே ஏவலர்கள் எனக் குறிப்பிடுவது சூத்திரர்களை தான் என அறிய முடிகிறது. சூத்திரர்களான ஏவலர்களின் ஏழு வகையில் வைப்பாட்டியின் மகன் இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதுமட்டுமின்றி, 1907ல் பதிப்புரிமை பெற்ற வேதாந்தச்சாரியர் என்பவர் எழுதிய “மநுதரும சாஸ்திரம்”  என்ற புத்தகத்தின் 248வது பக்கத்தில், ” ஏழு வகையான தொழிலாளிகளில் தேவடியாள் மகன் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. அதற்கு கீழே, பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவிதமான தொழிலாளியான சூத்திரடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க :  இந்து மதம் பற்றி ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு.. ஆதாரங்கள் இங்கே !

இதற்கு முன்பாக, ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கட்டுரையில் சூத்திரர்கள் பற்றி வேத நூல்கள், இஸ்கான் மடத்தின் நிறுவனர் சுவாமி பிரபுபாதா ஆற்றிய உரைகள் என ஆதாரங்கள் உடன் விரிவாக எடுத்துரைத்து இருந்தோம்.

வைரல் வீடியோவில் காண்பிக்கப்பட்ட புத்தகத்திலும், 1907ல் பதிப்புரிமை பெற்ற மனு தர்ம சாஸ்திர புத்தகத்திலும் ஏழு வகையான தொழிலாளிகளை(ஏவலர்கள்) சூத்திரர்கள் என்றும், அந்த சூத்திரர்களில் வைப்பாட்டி அல்லது தே..மகன் இடம்பெறுகின்றனர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள் : 

MANUTHARUMA SASTHIRAM (www.tamilpdfbooks.com) (1)

Acc.No.30173-Manu Needhi-2011 (1)

Please complete the required fields.




Back to top button
loader