அமைச்சர் சேகர் பாபுவிற்கு குடை பிடித்த மேயர் பிரியா ராஜன்.. உண்மையில் நடந்தது என்ன ?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு குடை பிடிக்கிறார். அந்த புகைப்படத்தினை அதிமுக மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தில் இருப்பதைத் தாண்டி முழு வீடியோவில் என்ன உள்ளது ?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக அக்டோபர் 10ம் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகச் சென்னை பாரி முனையில் கடந்த 27ம் தேதி ‘ திராவிட தொடரின் புதிய பதிப்பே ’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

Archive twitter link

அதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு குடை பிடிக்கிறார். அந்த புகைப்படத்தினை அதிமுக-வின் செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன் தனது டிவிட்டர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சமத்துவம், சமூகநீதி பெண்ணுரிமை எனப் பேசிவிட்டு அமைச்சருக்குக் குடை பிடிக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

அதனை Omjasvin, Komal Gautham போன்ற டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகவியலாளர்களும், Sanjeevee sadagopan உள்ளிட்ட பத்திரிகையாளர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தினை கொண்டு Mirror  Now தமிழக அமைச்சருக்குக் குடை பிடித்த சென்னை மேயர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்தி வெளியிட்டு உள்ளது. 

அந்த புகைப்படத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக திமுக-வினர் 19 வினாடி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் மேயர் தான் பிடித்திருக்கும் குடையை அமைச்சருக்குப் பிடிக்க, அது வேண்டாம் என்பது போல் அமைச்சர் குடையைப் பிடித்து இழுக்கிறார். அமைச்சரிடம் குடையைத் தர மறுத்து மேயரே குடையைப் பிடித்துக் கொள்கிறார். 

முழு வீடியோவில் என்ன உள்ளது ?

திமுக-வினர் பதிவிட்ட 19 வினாடி வீடியோவின் முழு வீடியோ Mobile Journalist என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகி உள்ளது. சுமார் 8 நிமிடம் உள்ள அந்த வீடியோவின் 30-ஆவது வினாடியில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு திமுக உறுப்பினர் ஒருவர் குடை பிடித்து இருப்பதைக் காண முடிகிறது.

அதன் பிறகு நீல நிற உடை அணிந்த வேறொரு நபர் அமைச்சருக்குக் குடை பிடிக்கிறார். அந்த வீடியோவில் 1 நிமிடம் 15 வினாடியில் அமைச்சர் சேகர் பாபு மேயரிடம் ஏதோ சொல்ல வர, மேயர் அருகில் வந்து அமைச்சருக்கும் சேர்த்து குடை பிடிக்கிறார். அப்போதுதான் குடை பிடிக்க வேண்டாம் என்பது போல் அமைச்சர் குடையைப் பிடித்து இழுக்க, அதனை மறுத்து மேயரே பிடிக்கிறார்.

அமைச்சருக்கும் மேயருக்கும் இடையே நடந்த இந்த நிகழ்வினை தொடர்ந்து அந்த வீடியோவில் அடுத்து மேயர்தான் அமைச்சருக்கும் சேர்த்து குடை பிடித்துள்ளார். 

புகைப்படமும் ஊடகவியலாளர்களும் :

அதிமுக-வை சார்ந்த கோவை சத்தியன் தனது அரசியல் நோக்கங்களுக்காக மேயர் அமைச்சருக்குக் குடைபிடிக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து இருக்கக்கூடும் . ஆனால், ஊடகவியலாளர்கள் அந்த புகைப்படத்தின் முழு பின்னணியினையும் தெரிந்து கொள்ளாமல் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது எந்த வகையில் சரி?

இந்த ஒரு புகைப்படத்தினை கொண்டு Mirror  Now 3 நிமிட செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் எடுப்பதற்கு முன்னும் பின்னும் என்ன நிகழ்ந்தது என்ற எந்த ஒரு தெளிவும் இல்லாத செய்தியாகவே அச்செய்தி உள்ளது.

அமைச்சரின் செயல் சரியா ?

மேயர் தாமாக குடை பிடித்துள்ளார் அதை பெற முயற்சித்த அமைச்சரை சிரித்த வாரே வேண்டாம் எனச் சொல்லிவிட்டார் .

ஆனால், அதற்கு முன்னதாக இரண்டு பேர் அமைச்சருக்கு குடைபிடிக்க என்ன தேவை இருக்கிறது? அந்த மேடையில் உள்ள அனைவரும் தங்களுக்கான குடைகளை தாங்களே பிடித்துள்ளனர். அமைச்சருக்கு மட்டும் வேறு சிலர் குடை பிடிக்கின்றனர். கட்சி அல்லது அவரிடம் வேலை செய்பவர்கள் குடை பிடிக்கும் தன்மையில் இருந்து மாறுவதில்லை . அதே நேரம் அது கூடாது என்று நிறுத்தும் பக்குவம் அரசியல்வாதிகளுக்கு வருவதும் இல்லை !

வேறு சில தலைவர்களுக்கு குடை பிடித்த நிகழ்வுகள் :

கடந்த ஆண்டுகளில் இந்திய பிரதமர் மோடிக்கு அவரது பாதுகாப்பு பணியில் உள்ள பணியாளர்கள் பல இடங்களில் குடை பிடித்து உள்ளனர். தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா 2015ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது மனைவியே அவருக்கு குடை பிடித்துள்ளார்.

2019ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற இருந்த கும்பமேளா இடத்தினை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதியநாத் பார்வை இடுகிறார். அப்போது அவருடன் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களே குடை பிடித்துள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மும்பை சென்ற போது அவரை வரவேற்க  அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தவர்களே அவர்களுக்கு குடை பிடித்துள்ளனர்.

ஆனால் , இதைப்பற்றி யாரும் எழுதவில்லை . மேயர் பற்றி எழுதினால் அரசியல் அதிர்வலைகள் ஏற்படும் என்ற நோக்கம் தான் முக்கியமா ? நீதி கோருவது மேயருக்கு மட்டும் தானா ?

அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகளைத் தாண்டி, அவர்கள் பொது வெளியில் செய்யும் ஒவ்வொரு அசைவுகளையும் மக்களும் ஊடகங்களும் இன்றைய இணைய உலகில் மிகக் கவனமாக உற்று நோக்குகிறார்கள். எனவே கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும். பொறுப்பு பகிர்வோருக்கும் வர வேண்டும் 

Links :

Controversy Sparked Over Chennai Mayor’s Act Of Holding An Umbrella For Tamil Nadu’s Minister

அண்ணன் தங்கை பாச மழை-ன்னு சொல்லுவாங்களே அது இது தானா.! | Mayor Priya, PK Sekar Babu Umbrella Video

Please complete the required fields.




Back to top button
loader