நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு போராடுகிறார்களா ? – வந்த பாதையை மறக்கிறதா திமுக !
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரத்தில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 24ம் தேதி நெடுஞ்சாலைத்துறை சார்பாகப் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் “சாலை விரிவாக்கம் என்றதும், நிலம் இல்லாதவர் கூட பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்காதே என்கின்றான்” எனப் பேசி இருந்தார். இதுமட்டுமில்லாமல், ஏன் சாலை விரிவாக்கம் அவசியம் என்பது குறித்தும், அது யாருக்குப் பயன் அளிக்கக் கூடியது என்றும் பேசியிருந்தார் .
இன்றைய சூழலில் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தனித்தனி கார் வைத்துள்ளனர், எனவே சாலை விரிவாக்கம் என்பது அவசியம் என்கிறார். நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியதின் அவசியமாக அவர் தரும் விளக்கம் இன்னும் கூடுதலானது.
“நிலம் கையகப்படுத்துவது எதற்காக? கார் போக. கார் யாருக்காகப் போகிறது? மக்களுக்காக. இதை உணராதவர்கள் பிரச்சனை எழுப்புகிறார்கள்” என்கிறார்.
சேலம் 8 வழிச் சாலையில் திட்டத்தில் திமுக-வின் நிலைப்பாடு என்ன ?
2018-ம் ஆண்டு சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தினை ஒன்றிய அரசான பாஜக அறிவிக்க, அதனை நடைமுறைப்படுத்த அன்று தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு முயற்சி செய்தது. இதற்காக சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தவும் செய்தது. இத்திட்டத்தை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட, உச்சநீதிமன்றமோ இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம், ஆனால் இதற்கான நிலங்கள் கையகப்படுத்திய விதம் தவறானது என்றும், கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
சேலம் 8 வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
நீதிமன்றத்தில் அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை- பாஜக அரசு நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது!
திட்டத்தைக் கைவிடுவதாக @CMOTamilNadu வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! pic.twitter.com/ivZOIGJjux
— M.K.Stalin (@mkstalin) December 8, 2020
இத்திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானபோது, 2020-ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையினை வெளியிடுகிறார். அதில் “விவசாயிகளின் வாழ்வாதாரம் நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முன்வைக்கவில்லை” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரமாக அவர்களின் நிலங்களே இருக்கிறது என திமுக கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். ஆனால் அக்கட்சியிலிருந்து இன்று தமிழக அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் எ.வ.வேலு அவர்களோ நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு போராட வருகிறார்கள் என பேசுகிறார். இந்த பச்சை துண்டை போட்டுக் கொண்டுதான் அவரது கட்சித் தலைவர் தமிழக விவசாய மக்களிடம் வாக்கு சேகரித்தார் என்பதை அதிகாரம் மறைத்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நிலம் என்பது உரிமையாளர்களுக்கு மட்டும் தானா ?
எப்படி சாலை என்பது வணிகம் சார்ந்த வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளதோ, அதே போல நிலம் என்பது பலதரப்பு மக்களின் வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அமைச்சருக்குத் தெரியாதா? விவசாய கூலிகளைப் பற்றி என்ன நினைக்கிறார். 8 வழிச் சாலை நில கையகப்படுத்தும் போது நிலம் இல்லாத விவசாய கூலிகள் போராடக் கூடாதா ? விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் போராடக் கூடாதா ?
2017 ஏப்ரல் 25-ல் உங்கள் தலைமையில் திருவண்ணாமலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். நீங்கள் வாங்கிய விவசாயக் கடன் எவ்வளவு, எதற்காக நீங்கள் போராடுகிறீர்கள் என்று கேட்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்.
2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ள 8 வழிச் சாலை எதிர்ப்பானது பல விவசாயிகள் ஆதரவைக் கிடைக்கச் செய்தது.
போராட்டம் என்பது மக்களின் உரிமையாக உள்ளது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் அவர்கள் வாழ்ந்து இருப்பார்கள். பல தலைமுறையாக நிலம் உரிமை மறுக்கப்பட்டு முதல் தலைமுறையாக நில அதிகாரத்தினை அடைந்திருப்பார்கள். அந்த நிலத்தில் அவர்களது உழைப்பு, உணர்வு என அனைத்தும் கலந்தே இருக்கும். திடீரென நாட்டின் வளர்ச்சிக்கு நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள். போராடாமல் வேறு வாழ்விடம் பார், வேறு வாழ்வாதாரம் தேடிக்கொள் என்பது சர்வாதிகார போக்காகவே அமையும்.
“நியாயம் இல்லாமல் செயல்படக்கூடிய அரசின் முதல் கருவி போராட்டங்களை ஒடுக்குவதுதான்” என திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி 2018 ஜூலை, 16ல் பேசியுள்ளார். இந்த வாக்கியம் எங்களது ஆட்சிக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறீரா அமைச்சர் எ.வ.வேலு.
அரசானது நாட்டின் வளர்ச்சி திட்டங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காகப் பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்காதே என்கிறார்கள் என்பது எம்மாதிரியான அதிகார போக்கு.
திமுக தலைமையிலான தமிழக அரசு என்பது பச்சை துண்டு உட்பட பல்வேறு தரப்பு மக்களின் வாக்கு வங்கியே என்பதை அமைச்சர் எ.வ.வேலு நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
இதனை தவிர்த்து போராட்டக்காரர்களைக் கிண்டல் செய்வது, மனு கொடுக்க வருபவரை அந்த மனுவை கொண்டே தலையில் தட்டுவது, மேயரை குழந்தை போல் நடத்துவது இதெல்லாம் நீங்கள் சொல்லும் திராவிட மாடலுக்கு எதிராகவே இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
link :
போலி பச்சைத்துண்டு போராளிகள் – அமைச்சர் எ.வ.வேலு குமுறல்..!
All Party blockade Protest headed by E. V. Velu
Kanimozhi about peoples protest for 8 way road