ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தினாரா மோடி.

டிசம்பர் 25-ம் தேதி தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ தன் ட்விட்டர் கணக்கில், “ கூட்டம் இருப்பதாக கற்பனையாக எண்ணிக் கொண்டு நரேந்திர மோடி ஜி கை அசைக்கிறார் ?? ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க ?? என பதிவிட்டு இருந்தார்.
இதேபோல் பலரும் பிரதமர் மோடி பாலத்தின் மீது கை அசைத்துக் கொண்டே செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு கேமரா முன் நடிக்கிறார் என பதிவிட்டனர்.
போகிபீல் பாலம் திறப்பு :
டிசம்பர் 25-ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 4.94 கி.மீ கொண்ட இந்தியாவின் நீளமான போகிபீல் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பிரதமர் மோடி கை அசைக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் போகிபீல் பாலத்தில் எடுக்கப்பட்டவையே.
நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டது போன்று பிரதமர் மோடி யாரும் இல்லாத இடத்தில் கை அசைத்தாரா என்றால் மக்கள் இருந்தார்கள் என்பதே உண்மை. பிரதமர் கை அசைக்கும் இடத்தில் மக்கள் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
பிரதமர் கை அசைக்கும் இடத்தின் கீழே ரயில் ஒன்று மட்டுமே உள்ளது மக்கள் இல்லை எனவும், ரயில் பாதை உள்ள இடத்தில் அதிகளவில் மக்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் சிலர் பதிவிட்டு உள்ளனர்.
போகிபீல் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் அப்பாலத்தில் செல்லும் முதல் பயணிகள் ரயிலுக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் என Press information Bureau படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
” குஷ்பூ ட்விட்டர் பதிவில் ரயில் இருப்பதை காணலாம். அதே புகைப்படத்தை PIB வெளியிட்டு இருக்கிறது. அந்த ரயில் உள்ளே மக்கள் இருப்பதை காணலாம். அவர்களுக்கே பிரதமர் கை அசைத்து உள்ளார் “.
இதன்பின் சிறிது தொலைவு சென்ற பிறகு பாலத்தில் இருந்து மோடி கை அசைக்கும் மற்றொரு படத்தில் கீழே நதிக் கரையில் மக்கள் கூட்டம் இருப்பதையும் காண முடிகிறது.
என்னதான் பிரதமர் கேமரா ரசிகர் என்றாலும் “ ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தினார் “ என குஷ்பூ பதிவிட்டது தவறானவை. அது ஏற்புடையது அல்ல.
PM Modi inaugurates India’s longest rail-road Bogibeel bridge on Brahmaputra river in Assam