நாம் தமிழர் கட்சி பேனரில் காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம் !
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.மகேஸ்வரி அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வைக்கப்பட்ட பேனரில் பிரபாகரன், நம்மாழ்வார் புகைப்படத்துடன் திருநீறு மற்றும் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவம் இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் புகைப்படம் பேனரில் உண்மையாக இடம்பெற்ற புகைப்படமா அல்லது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதாக எனக் கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு என்பவரிடம் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இது தெரியாமல் நடந்து விட்டது. உடனடியாக, அந்த பேனரை மாற்றி விடுகிறோம் ” எனப் பதில் அளித்து இருந்தார்.
2019-ல் தமிழக பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை , திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான், ” பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவியடித்து தன்வயப்படுத்திப் பார்க்கிறார்கள். இது வழமையாக அவர்கள் செய்யும் ஒன்றுதான். வள்ளுவரை நாங்கள் தெய்வமாகப் போற்றுகிறோம். அவரை இழிவுபடுத்துவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறியதாக 2019 நவம்பரில் இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருந்தது.
திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசுவதை விமர்சித்த சீமான் உடைய கட்சியில் அடிக்கப்பட்ட பேனரில் காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றதால் அப்புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது தெரியாமல் நடந்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பதில் அளித்து உள்ளனர்.
அப்டேட் :
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் தொகுதி செயலாளரை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு, அங்கு வைக்கப்பட்ட பேனர்களில் திருவள்ளுவரின் புகைப்படத்தை மாற்றியுள்ளதாக மாற்றப்பட்ட மற்றொரு பேனரின் புகைப்படத்தை நமக்கு அனுப்பி உள்ளனர்.