This article is from Dec 06, 2021

நாகலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக் கொலை.. சிறப்பு விசாரணைக்கு உத்தரவு !

நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாக நினைத்து வாகனம் ஒன்றின் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தால் நாகலாந்தில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் பகுதியில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை(டிச.4) இரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பணி முடிந்து வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையறிந்த உள்ளூர் மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது இறந்தவர்களின் உடல்களை கண்டு ஆத்திரம் அடைந்ததால் பாதுகாப்பு படையினரின் வாகனம் மற்றும் கூடாரங்களில் தாக்குதல் நடத்தி மோதல் உண்டானது. இந்த மோதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் தரப்பில் பலரும் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

” மியான்மரை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட அமைப்பான என்எஸ்சிஎன்(கே) அமைப்பின் யங் ஆப் பிரிவினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் சோதனை நடத்திய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ” நாகலாந்து காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

பொதுமக்கள் மீதான தாக்கல் சம்பவம் குறித்து நாகலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ, “மோன் ஒடிங் பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் மற்றும் சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில், ” நாகலாந்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு சம்பவத்தை முழுமையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும் ” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. இந்திய பாதுகாப்பு படையின் நடவடிக்கையில் உள்ளூர் அப்பாவி மக்கள் தவறாக குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல எனக் கூறப்படுகிறது.

நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது எனவும், ஒன்றிய அரசு உண்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டு இருக்கிறார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் இக்குழு விசாரணையை முடிக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், மோன் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader