தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசன் பொருள் என வைரலான வீடியோ.. மறுக்கும் ஹரியானா அரசு.. என்ன நடந்தது ?

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரின் இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். சுதந்திர தினத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், ரேசன் கடை ஒன்றில் 20ரூபாய்க்கு தேசியக் கொடியை வாங்கினால்தான் பொருட்கள் வழங்குவதாகவும், வாங்கவில்லை என்றால் ரேசன் பொருட்கள் இல்லை எனக் கூறுவதாக மக்கள் சிலர் பேசும் வீடியோ ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

Archive link 

தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசன் பொருட்கள் வழங்குவதாக இவ்வீடியோ வைரலாகவே, ஆளும் பாஜக அரசிற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழத் தொடங்கியது. அனைவரின் இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றச் சொல்லும் அரசாங்கம் அதை மக்களுக்கு இலவசமாக ஏன் வழங்க கூடாது என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது.

என்ன நடந்தது ?

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹேம்தா கிராமத்தில் ரேசன் டிப்போ வைத்திருப்பவர் 20ரூபாய்க்கு கொடியை வாங்கவில்லை என்றால் ரேசன் பொருட்கள் வழங்கப்படாது எனக் கூறி தேசியக் கொடியை விற்றுள்ளார்.

” இந்த விவகாரம் நாடு முழுவதும் வைரலாகியதால் மாவட்ட நிர்வாகம் அந்த நபரின் உரிமத்தை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மாவட்ட நிர்வாகம் 88,400 தேசியக் கொடிகளை ரேசன் டிப்போகளுக்கு வழங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ரூ.20 கொடுத்து கொடியை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது ” என கர்னால் மாவட்ட துணை கமிஷனர் அனிஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.

ஆனால், வைரலான வீடியோவில் இடம்பெற்ற ரேசன் டிப்போ வைத்திருப்பவர் உள்ளூர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அரசின் உத்தரவு உள்ளதால் கொடிக்கு ரூ.20 செலவாகும் என தெளிவாக கூறியுள்ளேன். 20 ரூபாய்க்கு கொடி வாங்காதவர்களுக்கு ரேசன் வழங்க மாட்டோம். ரேசன் பொருட்கள் வாங்க வருபவர்கள் கொடியை வாங்குவது கட்டாயம் என துறையின் ஆய்வாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

எனினும், ” மக்கள் விரும்பினால் மட்டுமே தேசியக் கொடியை வாங்க வேண்டும். பொது விநியோக அமைப்பு மையங்களில் மூவர்ணக் கொடி மக்களின் வசதிக்காக உள்ளது. மீதமுள்ள கொடிகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகு திருப்பி பெற்றுக் கொள்ளப்படும் ” என ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார் ” என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Archive link  

மேலும், PIB ஃபேக்ட் செக் ட்விட்டர் பக்கத்தில், ” தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என இந்திய அரசாங்கம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது தவறான தகவல். அந்த ரேசன் கடை ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ” பதிவிட்டு உள்ளது.

20ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால்தான் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக ரேசன் டிப்போ வைத்திருப்பவர் தெரிவித்து இருக்கிறார். இதனால், ரேசன் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் பேசிய வீடியோ வைரலாகி இருக்கிறது.

கொடி விவகாரத்தில், அரசு அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே 20ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கி கொள்ளலாம் என ஹரியானா அரசு மறுத்து விளக்கம் அளித்து இருக்கிறது. அரசு ரேசன் கடைகளில் கொடியை விற்பனை செய்ய கொடுத்ததால், அதிகாரிகளின் உத்தரவால் கொடியை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

links : 

Haryana suspends licence of ration depot holder who forced customers to buy national flag to get provisions

PIB Tweet 

Please complete the required fields.




Back to top button
loader