சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பிடத்திற்கு அருகில் வாக்களிக்க முடியுமா ?
ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்கு செலுத்துவது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் மக்களிடையே நிலவுகிறது.
அவ்வாறான குழப்பங்களில் ஒன்று, சொந்த ஊரில் இருந்து பல ஊர்களில் வேலைக்காக தங்கி இருக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வாக்கு செலுத்த முடியுமா ?. இதைப்பற்றிய பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
மேலும், தினமணி பத்திரிகையில் வெளியான செய்தியில் மக்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்கு செலுத்த முடியும். அதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என கூறி இருந்தனர். எனினும், அந்த செய்திக்கு ஆதாரம் இல்லை என்பதால் தினமணி நாளிதழின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
அவ்வாறு கூறிய செய்தியில், nvsp.in எனும் இணையத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என இடம்பெற்றுள்ளது. nvsp.in என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கையில் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 001(வாக்காளர் புகைப்பட அடையாளம் குறித்த பிரச்சனை), படிவம் 6, படிவம் 6A, படிவம் 7, படிவம் 8 , படிவம் 8A உள்ளிட்ட படிவங்கள் இருக்கிறது.
பெயரை சேர்க்க, தொகுதியை மாற்றிக் கொள்ளும் இருப்பிட மாற்றம் பற்றி அனைவரும் அறிந்ததே. அதற்கான படிவங்கள் உள்ளன. இதைத் தவிர, பிற புதிய வசதியாக அருகில் உள்ள இடத்திலேயே வாக்கு செலுத்த அளிக்கப்படும் படிவங்கள் என்று ஏதுமில்லை.
வாக்கு உரிமை எந்த தொகுதியில், எந்த வாக்குச்சாவடியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அங்கே சென்று தான் நாம் வாக்கு செலுத்த முடியும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களர் பட்டியல் தயாராக இருக்கும். அங்கு வாக்குப்பதிவு செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே வாக்கினை பதிவு செய்ய முடியும். வேறு தொகுதியில், வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்த வாய்ப்பில்லை. தபால் வாக்கு முறைகள் புழக்கத்தில் இன்றும் உள்ளன.
National Voters Service portal