புதிய ஊதியக் கொள்கை: வரி விலக்கு ரத்து, பிஎஃப் பணம் உயர்வதால் பாதிப்பா ?
2019-ம் ஆண்டு ” புதிய ஊதியக் கொள்கையை ” மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சில கேள்விகள் நமது ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
புதிய ஊதியக் கொள்கையின்படி, ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை(Basic salary) குறைந்தபட்சம் 50% ஆக அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றது. இதனால், அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியக் கூறுகளை மாற்றி அமைக்க நேரிட்டால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் குறையும் எனக் கூறுகிறார்கள்.
இந்தியாவில் முதன்முறையாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎஃப்) வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், ஆண்டுக்கு ரூ2.5 லட்சத்திற்கு மேல் சேரும் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்குகளுக்கு வட்டி வருமானத்தில் வரி விலக்கு கிடையாது என்று அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இது பி.எஃப்-க்கு பங்களிக்கும் அனைத்து ஊதியம் பெறும் நபர்களுக்கும் கவலையை ஏற்படுத்தக்கூடுமா என்று பார்த்தால், ஒரு ஆண்டிற்கு ரூ2.5 லட்சத்துக்கு மேல் பிஎஃப் சேரும் நபர்களுக்கு மட்டுமே பாதிக்கும், எனினும் இது அவர்களின் தற்போதைய சேமிப்பைப் பாதிக்காது என்றும் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக மேலும் சில விவரங்கள் அறிய ஆடிட்டர் கார்த்திக் அவர்களை அணுகிய போது, ” இந்த புதிய விதிகள் 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆண்டிற்கு ரூ2.5 லட்சத்துக்கு மேல் பி.எஃப் பங்களிப்பவர்களை மட்டுமே பொருந்தும். இது சாதாரண வர்க்கத்தினரை பொதுவாக பாதிக்காது. மேலும், பிஃஎப் சேமிப்பிற்கான 8.5 சதவீதம் வட்டிக்கும் இனி தொழில் வரி பிடித்தம் செய்யப்படும். ஆனால் புதிய விதியின் படி சாமானிய மக்கள் வேறு ஒரு வகையில் பாதிப்படையலாம். அது, இதற்கு முன்னர் அடிப்படை சம்பள விகிதம் 30-40% வரை மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது குறைந்தபட்சம் 50% இருக்க வேண்டும் என்கிறார்கள். உதாரணமாக, ஒருவர் 50,000 ஊதியம் வாங்குகிறார் என்றால் இதற்கு முன்னர் உள்ள விதி படி அடிப்படை ஊதியம் 40% அதாவது 20,000 ரூபாயிலிருந்து 12 சதவீதம் 2,400 ரூபாய் பி.எஃப் பிடித்தம் செய்து அவருக்கு 47,600 ரூபாய் ஊதியமாக வரும். ஆனால், புதிய விதியின் படி அடிப்படை ஊதியம் 50% என நிர்ணயித்தால் 50,000 ரூபாய் ஊதியம் வாங்குபவரின் அடிப்படை ஊதியம் 25,000 ரூபாய், அதில் 12% பி.எஃப் பிடித்தம் 3000 ரூபாய் போக வருமானமாக 47,000 ரூபாய் வரும் ” என்று கூறினார்.
அடிப்படை சம்பளம் உயரும் போது, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சார்பில் பி.எஃப் கணக்கிற்கு செலுத்தப்படும் தொகை அதிகமாகும். இந்த தொகையை அரசு முதலீடுகள் மூலம் வருவாய் ஈட்டி பிஃஎப் பயனாளர்களுக்கு வட்டியாக(8.5%) தருகிறது. இதுவும் தற்போது உயரும்.
புதிய ஊதிய முறையால் ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தில் சில ஆயிரம் குறையும் என்றாலும், பிஃஎப் தொகை அதிகரிக்கும். ஆண்டுக்கு ரூ2.5 லட்சத்திற்கு மேல் சேரும் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்குகளுக்கு வரி விலக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link :
http://egazette.nic.in/WriteReadData/2019/210356.pdf