இந்தியாவில் 900 மாவட்டங்கள் என உளறிய அண்ணாமலை.. வடமாநிலங்களால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை : நிதி ஆயோக் தரவுகள்
அமெரிக்கா சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு நடந்த நிகழ்வு ஒன்றில் இந்தியாவில் 900 மாவட்டங்கள் உள்ளது. அதில் பின்தங்கிய 100 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து நிதி ஆயோக்கின் மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த 100 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளன எனவும் பேசியுள்ளார்.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாநில தலைவர் திரு. @annamalai_k ஆற்றிய உரையின் தொகுப்பு pic.twitter.com/82ogRLPZSH
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 11, 2022
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்சில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியது போல இந்தியாவில் 900 மாவட்டங்கள் இல்லை, ஆர்.பி.ஐ தகவலின்படி இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 768 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.
மேலும், அவர் பேசுகையில், நிதி ஆயோக்கில் தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பான திட்டங்கள் மூலம் அதனை முன்னேற்றி வருவதாகப் பேசியுள்ளார்.
நிதி ஆயோக் :
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி தேசிய திட்டக் குழுவை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக “நிதி ஆயோக்” (National Institution for Transforming India – NITI) என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக 2018ம் ஆண்டு Aspirational District Programme என்ற தலைப்பில் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கிய 101 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அத்தகைய பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் 5 தென் மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு (2), ஆந்திரா (3), தெலுங்கானா (3), கேரளா (1) மற்றும் கர்நாடகா (2) என ஒட்டு மொத்தமாக 11 மாவட்டங்கள் மட்டுமே தென் மாநிலங்களில் இருந்து அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வட மாநிலத்தில் குறிப்பாக மத்தியப் பிரதேசம் (8), உத்திர பிரதேசம் (8), குஜராத் (2), ஜார்கண்ட் (19), ராஜஸ்தான் (5), சத்தீஷ்கர் (10) மற்றும் பீகார் (13) ஆகிய மாநிலங்களிலிருந்து 65 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
நிதி ஆயோக்கின் இப்பட்டியலில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அதிகப்படியாக 19 மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரையில் இம்மாநிலத்தை பாஜக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு இருப்பதினை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பின்னடைவாக இருப்பதாக 2018, ஏப்ரல் மாதம் அன்றைய நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இம்மாநிலங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க : கேரளா No.1, தமிழ்நாடு No.2 : 2020-21 நிதி ஆயோக் தரவரிசையில் தென்னகம் கலக்கல் !
2019-2020ம் ஆண்டில் சுகாதார செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களை நிதி ஆயோக் பட்டியலிட்டது. அதில் கேரளா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய உத்தரப்பிரதேச மாநிலமோ கடைசி இடத்தில் இருக்கிறது.
பின்தங்கிய மாவட்டங்களின் தற்போதைய நிலை :
நிதி ஆயோக் பட்டியலிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்தான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டினைச் சேர்ந்த ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் முறையே 5வது மற்றும் 8வது இடத்தில் உள்ளன.
மேலும், இந்த 101 மாவட்டங்களில் உள்ள சுகாதார வளர்ச்சி குறித்தான தரவரிசையில் விருதுநகர் முதல் இடத்திலும், ராமநாதபுரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
பின்தங்கிய மாவட்டங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறித்தான பட்டியலில் தென்னிந்தியாவில் உள்ள 11 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ளது. இதேபோல் விவசாய வளர்ச்சியில் முதல் 20 இடத்தில் 7 இடங்களை தென் மாநிலத்தை சார்ந்த மாவட்டங்களே பிடித்துள்ளது.
இந்திய அளவில் பின்தங்கிய மாவட்டங்களை பட்டியலிட்டு, அதன் வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவட்டங்களின் வளர்ச்சியை கணக்கிடுகையில் அதிலும் தென்னிந்தியாவை சேர்ந்த பகுதிகளே அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதினை காண முடிகிறது.
இப்படி சமூக மற்றும் பொருளாதாரத்தில் தென்னிந்தியாவின் வளர்ச்சி மேம்பட்டு இருக்கையில் ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரே வகையான திட்டங்களை வகுப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கார்டு, ஒரே மதம் என்பதைத் தாண்டி, நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் வடஇந்திய மாநிலங்களை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
Links :
https://www.niti.gov.in/aspirational-districts-overall-and-sector-wise-baseline-rankin
states-like-bihar-up-keeping-india-backward-niti-aayog-ceo-says
FirstDeltaRanking-May2018-AspirationalRanking
Aspirational_Districts_Overall_and_Sector_wise_Baseline_Ranking
Indian-States-and-Districts-List