நிதி ஆயோக் வெளியிட்ட வறுமை குறியீடு 2023.. தொடர்ச்சியான வளர்ச்சியில் கேரளா, தமிழ்நாடு !

நிதி ஆயோக் வெளியிட்ட பல பரிமாண வறுமை குறியீட்டுப் பட்டியலில் ஏழ்மை நிறைந்த மாநிலமாகப் பீகார் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஏழ்மை குறைந்த மாநிலங்களாக கேரளாவும், தமிழ்நாடும் உள்ளன.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS – National Family Health Survey) 2015-16 மற்றும் 2019-21ம் ஆண்டுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு’ (National multidimentional poverty index – 2023) அறிக்கையினை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய பரிமாணங்களை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் இளம்பருவ இறப்பு, குழந்தை பிறப்பின் போது தாயின் ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி, சொத்து, வங்கிக்கணக்கு ஆகிய 12 அம்சங்களைக் கொண்டுள்ளது.
அப்படிக் கணக்கிடப்பட்டதில் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டுகளை விட நல்ல விதமாக முன்னேறி இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதில் மாநிலங்கள் வாரியாக மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாட்டிலேயே அதிகமாகப் பீகாரில் 33.76 சதவீதம் (2019-21) பேர் ஏழையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2015-16ம் ஆண்டு வெளியான NFHS அறிக்கையைக் காட்டிலும் பீகாரில் வறுமை அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த அறிக்கையில் (2015-16) 51.89 சதவீதமாக இருந்தது 18.13 சதவீதம் குறைந்து தற்போது 33 சதவீதமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது பிற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிக அதிகமாகும்.
இதனை தொடர்ந்து ஜார்கண்ட், மேகாலயா மாநிலங்கள் முறையே 28.81, 27.79 சதவீதம் பேர் வறுமையுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. அனைத்து மாநிலங்களை போலவே இம்மாநிலங்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நல்ல விதமாக வளர்ச்சியே அடைந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசம் (22.93%) மற்றும் மத்தியப் பிரதேசம் (20.63%) ஆகியவை நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன.
தமிழ்நாட்டின் நிலை :
பல பரிமாண வறுமை குறியீட்டுப் பட்டியலில் வட மாநிலங்கள் பல மோசமான நிலையில் உள்ள அதே நேரத்தில், தெற்கே உள்ள கேரளா, தமிழ்நாட்டின் நிலை என்பது வேறாக உள்ளது. கேரளாவில் வெறும் 0.55 சதவீதம் மக்கள் மட்டுமே வறுமையில் உள்ளனர். இந்தியாவிலேயே குறைந்த அளவு இருப்பது கேரளாவில் தான். அதேபோல் தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.
தமிழ்நாட்டினை பொறுத்த அளவில் மொத்தமாக 2.2 சதவீதமாக உள்ள பல பரிமாண வறுமை குறியீடானது நகர்ப்புறத்தில் 1.41 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 2.9 சதவீதமாகவும் உள்ளது.
மேலும், முன்னர் கூறிய 12 விதமான பிரிவுகளில் தமிழ்நாட்டினை பொறுத்த அளவில் கல்வி தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. 2015-16ம் ஆண்டு தரவின் படி ஒரு குடும்பத்திலுள்ள 10 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒருவர் கூட ஆறு ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்கிற நிலை 19.62 சதவீதமாக இருந்தது. அதே போல், 8ம் வகுப்பு முடிக்கும் வரை வயது உடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது 3.97 சதவீதமாக இருந்தது.
ஆனால், 2019-21ம் ஆண்டு தரவின் படி அந்த சதவீதமானது முறையே 25.76, 8.20 ஆக அதிகரித்துள்ளது. இக்கால இடைவெளி என்பது கொரோனா காலத்தையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் ஏழை எளிய பள்ளி மாணவர்கள் பலர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாமல் இடைநிற்றல் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்தது.
இதனைச் சரி செய்யத் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் எவ்வளவு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் தரவுகளின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும்.
ஊட்டச்சத்து :
உணவு என்பதைத் தாண்டி ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது சரிவிகித வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அதன்படி பூஜ்ஜியம் முதல் 59 மாதங்களான குழந்தைகள், 15 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள், 15 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்ற தகவலின் அடிப்படையில் மாநிலங்கள் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பல பரிமாண வறுமை குறியீட்டுப் பட்டியலில் பின்தங்கியுள்ள பீகார் (42.20%), ஜார்க்கண்ட் (40.32%) மாநிலங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு பட்டியலிலும் பின்தங்கியுள்ளது. அதற்கு அடுத்த படியாகக் குஜராத் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 38.09 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 19.17 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். கடந்த அறிக்கையை (24.77%) காட்டிலும் இது 5.6 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பல பரிமாண வறுமை குறியீட்டு நிலையானது குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் கல்வி குறித்தான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.
Source :
National-Multidimentional-Poverty-Index-2023-Final-17th-July