This article is from Mar 20, 2020

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பதாக செய்தி| மருத்துவ மாணவர் மறுப்பு !

கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 300 பேர் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பதாக தமிழ் ஊடகச் செய்திகளில் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் யாரும் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு மார்ச் 31-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்டதால் அங்கிருந்து 200 இந்திய மாணவர்கள் இந்தியா வர புறப்பட்டனர். இதில் தமிழக மாணவர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் வந்த விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் வந்த பொழுது இந்தியா விதித்து இருக்கும் தடை தெரிய வந்துள்ளது. இதனால் 200 பேரும் இந்தியா வர முடியாமல் கோலாலம்பூரில் சிக்கினர்.

வெளிநாட்டு விமானங்கள் பிலிப்பைன்ஸ் வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களால் இந்தியாவிற்கும் வர முடியாமல், பிலிப்பைன்ஸிற்கும் திரும்ப முடியாமலும் தவித்து உள்ளனர். இதையடுத்து, மாணவர்கள் நாடு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பின் அவர்கள் இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Youtube link | archived link

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மற்ற இந்திய மாணவர்கள் வெளியிட்ட வீடியோவுடன் போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் உணவு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிக்கி தவிப்பதாகவும், 72 மணி நேரத்திற்குள் மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டின் டகுபான் நகரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சென்னையைச் சேர்ந்த மாணவர் யூடர்னைத் தொடர்பு கொண்டு, ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், ” பிலிப்பைன்ஸ் நாட்டில் உணவு, குடிநீர் வசதிகள் இல்லை மாணவர்கள் தவித்து வருவதாக ஊடகங்களில் கூறுவதில் உண்மை இல்லை. இங்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன. ஏப்ரல் 12-ம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் விடுதி, தங்குமிடத்திலேயே உள்ளோம். கோலாலம்பூரில் தங்க வைக்கப்பட்ட மாணவர்களின் நிலை வேறு. இங்குள்ளவர்கள் நிலை வேறு. ஏனெனில், அவர்களால் இந்தியாவிற்கும் செல்ல முடியாமல், திரும்பி பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் வர முடியாமல் உள்ளனர். ஆனால், இங்குள்ள எங்களுக்கு அவ்வாறான பிரச்சனைகள் இல்லை. முதலில் சொந்த நாட்டிற்கு செல்ல நினைப்பவர்கள் 72 மணி நேரத்திற்குள் செல்லலாம் என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்து இருந்தது. பின்னர் அந்த உத்தரவையும் ரத்து செய்து உள்ளனர். சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புவார்கள் தாராளமாக செல்லலாம், ஆனால் அவர்கள் நாங்கள் கூறும் பொழுது திரும்ப வந்தால் போதும் என கூறினர்.

குறிப்பிட்ட நாட்களுக்கு அனைவரும் வீடுகளில் இருக்கவே அறிவுறுத்தி உள்ளனர். இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிற மாணவர்கள் வெளியிட்ட தவறான வீடியோவால் இந்திய மாணவர்கள் அனைவரும் பிலிப்பைன்ஸில் சிக்கி தவித்து வருவதாக தவறாக நினைத்து வருகின்றனர். எங்களின் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். ஆகையால், தவறான செய்திகளையும், தேவையற்ற அச்சத்தையும் பகிர வேண்டாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

பெற்றோர்களை அச்சம் அடைய வைக்கும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என இத்தகவலை இந்திய மாணவர் பகிர்ந்து உள்ளார். மேலும், அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்கள், ஆணைகளையும், செய்திகளையும் அனுப்பி இருந்தார். எனவே, தேவையற்ற அச்சத்தை உருவாக்காமல், முன்னெச்சரிக்கையாக இருத்தல் நல்லது.

Please complete the required fields.




Back to top button
loader