இந்தியாவிலிருந்து தப்பிய வங்கி மோசடிக் குற்றவாளி மெஹீல் சோக்ஸி வெளிநாட்டில் சிக்கினார் !
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கி மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி டொமினிகா எனும் கரீபியன் நாட்டில் பிடிபட்டார். அவர் விரைவில் இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு லெட்டர் ஆப் அண்டர்டேக்கிங்ஸ் (LoU) மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர நகை வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மீது சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி வழக்கு போடப்பட்டது. இதனை அடுத்து நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில், இந்திய பண மோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) நீதிமன்றம் நீரவ் மோடியை ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ என்று அறிவித்தது. இறுதியில் மார்ச் 20, 2019 அன்று லண்டனில் கைது செய்யப்பட்டார்.
( LoU – ஒரு இந்திய வங்கியின் வெளிநாட்டு கிளையிலிருந்து குறுகிய கால கடன் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு வங்கி நிறுவனம் வழங்கும் உத்தரவாதத்தின் ஒரு படிவம்)
அவரது கூட்டாளியான மெஹுல் சோக்ஸிக்கு முதலீட்டாளர் திட்டத்தின்படி அவருக்கு ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டிலும் குடியுரிமை இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் சோக்ஸி மறைந்திருந்தார்.
அவர் மீது கரீபியன் தேசத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன – ஒன்று அவர் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பானது (Extradition case), இரண்டாவது அவரது ஆன்டிகுவா குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பானது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வசிப்பிடத்தில் இருந்து காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின. அந்நாட்டின் போலீஸ் அதிகாரிகள் அவரது வாகனத்தை உணவகம் ஒன்றில் கண்டுபிடித்து விசாரணை நடத்திக்கொண்டு இருந்த நிலையில் அவருக்கு எதிராக இன்டர்போல் மஞ்சள் அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அவர் வசித்து வந்த ஆன்டிகுவாவின் அண்டை நாடான டொமினிகாவில் இன்று மெஹுல் பிடிபட்டார். அவரை டொமினிக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.
” டொமினிகா மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளது. அப்போது தான் அங்கு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியும். நாங்கள் அவரை மீண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இங்கு இருந்து தப்பியது மூலம் அவர் ஒரு பெரிய பிழையைச் செய்து விட்டார். டொமினிகன் அரசாங்கமும் சட்ட அமலாக்கமும் எங்களுடன் ஒத்துழைத்து வருகின்றனர். இது தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்துள்ளோம் ” என ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவுன் எனக் கூறியுள்ளார்.
நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில், ஐக்கிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். இத்தீர்ப்பினை எதிர்த்து நீரவ் மோடி மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்தியாவில் கூடிய விரைவில் அவர் வழக்குகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : மல்லையாவை மிஞ்சிய நீரவ்மோடி.. மக்கள் பணம் நிலை என்ன !
link :
nirav-deepak-modi-punjab-national-bank-uk-high-court
mehul-choksi-wanted-in-pnb-scam-missing-from-antigua
mehul-choksi-made-monumental-error-to-be-repatriated-to-india-by-dominica-antiguan-pm-gaston-browne