வாகனத்தை சேதப்படுத்தும் காவல்துறையின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது ?

பொது மக்கள் மத்தியில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பல எழுவதுண்டு. சாதாரண மக்களிடம் மட்டுமே காவல்துறை வீரத்தைக் காட்டும், தவறு செய்பவர்களிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்களா என்ற வார்த்தைகள் கேட்பது எதார்த்தம். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் தவறான காரியங்கள் என வீடியோக்கள் பல அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆவது உண்டு.
நவம்பர் 18-ம் தேதி அருண் முகில் என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவில், ” ஆட்டோ ரிக்சா போன்ற வாகனங்கள் வரும் பொழுது அதை வழி மறிக்கும் காவல்துறையினர், பயணிகளை இறக்கி விட்டு வாகனத்தில் இருக்கும் முன் பக்க லைட்டை தடியால் அடித்து உடைக்கும் காட்சிகள் ” பதிவாகி இருக்கின்றன. ஒன்று அல்ல இரண்டு அல்ல அவ்வழியில் வரும் ரிக்சாக்களில் லைட்களை ஒவ்வொன்றாக உடைத்து அனுப்பும் காட்சிகளை பார்க்க முடிந்தது.
அருண் முகில் பதிவிட்ட வீடியோ பதிவு 10 ஆயிரம் ஷேர்களை கடந்து முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. ஏழைகளின் மீது மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் காவல்துறையின் செயல் என பலரும் இதே வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, ஏன் அப்படி செய்தார்கள் என யாரும் குறிப்பிடவில்லை. சிலர் கமெண்ட்களில், LED பல்புகளை மட்டுமே உடைத்து அனுப்பி விடுகிறார்கள், இதில் தவறில்லை என்றும், இது தமிழகமே இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
எங்கு நிகழ்ந்தது :
நவம்பர் 20-ம் தேதி Drivespark என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில், ” மேற்கு வங்கத்தில் உள்ள வர்தமன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சிலர் மூர்க்கத்தனமாக எலெக்ட்ரிக் ரிக்சாவின் ஹெட்லைட்கள் , மீட்டர் மற்றும் கன்சோல் ஆகியவற்றை உடைத்து உள்ளனர் ” என வெளியிட்டு இருந்தனர்.
காவல்துறையினர் எலெக்ட்ரிக் ரிக்சாவின் லைட்டை சேதப்படுத்தி, ஓட்டுனர்களை ஒன்று செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர். எலெக்ட்ரிக் ரிக்சா வாகனங்கள் செல்லக்கூடாத (நோ என்ட்ரி) பகுதியில் ரிக்சா சென்றதே இப்படி நடந்து கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த வகையான எலெக்ட்ரிக் ரிக்சா தடை செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்லும் காரணத்தினால் போக்குவரத்து நிறைந்த குறிப்பிட்ட சாலைகளில் செல்ல தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், எலெட்ரிக் ரிக்சாக்கள் செல்வதை நிறுத்த செய்யும் காரியங்கள் அதிகமானதாக எண்ணத் தோன்றுகிறது. இதேபோல், டெல்லியில் இயக்கப்படும் இதுபோன்ற எலெக்ட்ரிக் ரிக்சாக்களின் டயர்களை கூர்மையான பொருள் கொண்டு போலீசார் சேதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
சில எலெக்ட்ரிக் ரிக்சா வாகனங்கள் பதிவு எண்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அவற்றிற்கு காவல்துறையால் அபராதம் விதிக்க முடியவில்லை. மேலும், அவற்றை பறிமுதல் செய்தல், பாதுகாத்தல் உள்ளிட்டவையில் நீண்ட நடைமுறைகள் இருப்பதால் அதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்வதை காவல்துறையினர் தவிர்க்கின்றனர். இருப்பினும், கடுமையான முறைகளால் ஒருவருக்கு எச்சரிக்கை விடும் பொழுது அது அனைத்து ரிக்சா ஓட்டுனர்களுக்கு செல்லும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலில், காவல்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தும் வைரல் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல. மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம். நோ என்ட்ரி பகுதியில் எலெக்ட்ரிக் ரிக்சா சென்றால் காவல்துறையினர் வாகனத்தின் ஹெட்லைட்டை உடைத்து அனுப்பியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. காவல்துறையின் செயல் சரியா, தவறான என்ற கருத்திற்கு நாம் வரவில்லை. ஆனால், எங்கு, எதற்காக நிகழ்ந்தது என்பது குறித்த தகவலை விரிவாக பதிவிட்டு இருக்கிறோம்.
Proof links :
Driving a rickshaw in no-entry was costly, traffic police broke headlight
Watch cops intentionally breaking up electric rickshaws for wrong entry [Video]