போலியோ மருந்துகளின் தாமதத்திற்கு நிதி பற்றாக்குறை காரணமா ?

ஜனவரி 18-ம் தேதி சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பீகார், மத்தியப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு கடிதத்தின் வாயிலாக தேசிய போலியோ தினம் சார்பில் பிப்ரவரி 3-ம் தேதி அமைக்கப்பட இருந்த போலியோ மருந்து முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைப்பதாக தெரிவித்து இருந்தது.
தேசிய நோய்த்தடுப்பு தினத்தில் நடக்கவிருக்கும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாம்கள் தள்ளி வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியதில் இருந்து மத்திய அரசிடம் தேவையான போலியோ சொட்டு மருந்துகள் கையிருப்பு இல்லை என்றும், போலியோ சொட்டு மருந்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மத்திய அரசிடம் போதுமான போலியோ சொட்டு மருந்துகள் இல்லை என்பதாலே போலியோ முகாம்களின் தேதி தள்ளிவைக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதற்கு மறுப்பு தெரிவித்து ஜனவரி 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது மத்திய அமைச்சகம்.
போலியோ சொட்டு மருந்து வழங்குவதை மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது என்பதற்கான சரியான காரணத்தை காண்போம்.
“ ஏற்கனவே அரசிடம் குழந்தைகளுக்கு அளிக்கத் தேவையான பாதுகாப்பான BOPV(Bivalent oral polio vaccine) மருந்துகள் இருக்கிறது. எனினும், அம்மருந்துகள் கடுமையான சோதனைகளுக்கு உட்பட உள்ளன. தேசிய சோதனை கூடத்தில் இருந்து ஒவ்வொரு அடுக்குகளும் சோதனை முடிந்து வெளியான பிறகே ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். IPV(inactivated polio vaccine) மருந்துகள் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் கையிருப்பு குறைவாக ஒன்றும் இல்லை. மேலும், சந்தையில் விலையின் ஏற்றம் இருப்பினும் போலியோ மருந்திற்கான நிதி பற்றக்குறை இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது “ என அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் போலியோ மருந்துகளில் விஷக் கிருமிகள் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிய வந்தது.
BIO-MED என்ற நிறுவனத்தின் BOPV(Bivalent oral polio vaccine) போலியோ சொட்டு மருந்துகளில் TYPE-2 வைரஸ் இருப்பதை கண்டறிந்த பின்னர் பெரியளவில் சர்சையாகியது. ஆகையால், போலியோ சொட்டு மருந்துகளின் மீதான சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
முழுமையாக படிக்க : போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ்.. போலியோ மருந்து நிறுவனம் மூடல்.!
சோதனைகளுக்கு பின் போலியோ சொட்டு மருந்துகள் மாநில முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் போலியோவை முழுமையாக ஒழித்தது பிரதமர் மோடி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்ற ஆண்டு கூறி பலரின் கண்டனத்தை பெற்றார். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார மையம் சான்றிதழ் 2014 மார்ச் மாதம் வழங்கியது. போலியோவிற்கு எதிராக அரசின் முயற்சிகள் தொடர்கிறது என்பதே உண்மை.
படிக்க : இந்தியாவில் போலியோவை ஒழித்தது மோடியா ?
இன்றும் போலியோவிற்கு எதிராக போராடும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் படிப்படியாக போலியோ நோய் குறைக்கப்பட்டாலும் தற்போது போலியோ மருந்துகளில் கூட TYPE-2 வைரஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டில் இருந்து Trivalent oral polio vaccine வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று விதமான வைரசிற்கும் எதிரானது. ஆகையால், போலியோ மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு அவசியமாக உள்ளது.
இன்றும் நம் குழந்தைகளுக்கு போலியோவின் பாதிப்பு முழுமையாக இல்லை எனக் கூறிவிட முடியாது. தொடர்ச்சியான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அதற்கான முகாம்களை காலம் தாழ்த்துவது நிச்சயம் உகந்ததாக இருக்காது.
Pulse polio programme postponed
Government puts off polio immunisation programme
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.