தவறானப் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய புதுச்சேரி முதல்வர் !

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உயர்சாதி வகுப்பினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் தலித் பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண் என மற்றொரு பெண்ணின் புகைப்படத்தை தவறாக வைரல் செய்து வந்தனர். இதுதொடர்பாக, நாமும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில்தான், புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணிற்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரும் இணையத்தில் வைரலான வேறொரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மலர் தூவும் புகைப்படத்தை தன்னுடைய முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளார்.
இதையடுத்து, நீங்கள் தவறான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளீர்கள் என பலரும் அப்பதிவுகளில் கமெண்ட் செய்ய முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் இருந்து அப்பதிவை நீக்கி உள்ளார். பதிவை நீங்கி இருந்தாலும் அதைப் பதிவிடக் காரணம், இணையத்தில் வைரலான தவறான புகைப்படம் புதுச்சேரி முதல்வர் மரியாதை செலுத்தும் இடம் வரை சென்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க : இவர் உ.பியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண் அல்ல| வைரலாகும் தவறான புகைப்டம்!
ஹத்ராஸ் பெண் என வைரலான புகைப்படத்தில் இருக்கும் பெண் கடந்த 2018-ம் ஆண்டில் சண்டிகர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட காரணத்தினால் உயிரிழந்த பெண் என முன்பே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
2 வருடங்களுக்கு முன்பு இறந்த பெண்ணின் புகைப்படத்தை ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் என இந்திய அளவில் தவறாக பரப்பி வருகின்றனர். யூடியூப் சேனல்கள், பிரபலங்களின் பதிவுகளில் தவறான புகைப்படம் இடம்பெறுவதை பார்க்க முடிகிறது.