பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் குழு அறிவித்து உள்ளதற்கு எதிராக ரத்தன் டாடா ” இந்த நிபுணர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், மனிதர்களின் செயல்நோக்கம் மற்றும் உறுதியான முயற்சிகளின் மதிப்பு பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் ” எனக் கூறியுள்ளதாக நீண்ட கருத்து ஒன்று இந்திய மக்களை நம்பிக்கையூட்டும் விதத்தில் உலாவி வருகிறது.
இதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவையில் ரத்தன் டாடாவின் நம்பிக்கையூட்டும் கருத்து என அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், ரத்தன் டாடா தரப்பில் இருந்து அப்படியொரு கருத்து வெளியிடப்படவில்லை என மறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 10-ம் தேதி ரத்தன் டாடாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” இந்த போஸ்டில் இருப்பதை நான் சொல்லவும் இல்லை, என்னால் எழுதப்படவில்லை. வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதை ஊடகங்கள் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அதை என்னுடைய அதிகாரப்பூர்வ சேனல்களில் கூறுவேன். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் ” என வைரல் பதிவுடன் தெரிவித்து உள்ளார்.
This post has neither been said, nor written by me. I urge you to verify media circulated on WhatsApp and social platforms. If I have something to say, I will say it on my official channels. Hope you are safe and do take care. pic.twitter.com/RNVL40aRTB
— Ratan N. Tata (@RNTata2000) April 11, 2020
கொரோனா வைரசிற்கு எதிராக போராடுவதற்கு நிதியுதவியாக டாடா தரப்பில் இருந்து பெரும் தொகை அறிவிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் டாடா நிறுவனத்திற்கு மீது மதிப்பை கூட்டியது. இதையடுத்து, ரத்தன் டாடா கூறியதாக போலியான போஸ்ட்டை வைரல் செய்து வருகிறார்கள்.