கைதே ஆகாத அண்ணாமலையை விடுதலை செய்ய சொல்லி பாஜகவினர் மறியல்.. எங்கு நிகழ்ந்தது ?
தமிழக அரசை பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கச் சொல்லி தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் மே 31-ம் தேதி நடைபெற்றது.
போராட்டத்தில் கூடிய ஆதரவாளர்கள் மத்தியில் அண்ணாமலை பேசிய பிறகு ஆட்டோவில் ஏறி சென்றார். அண்ணாமலை ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிட போவதாக தவறான தகவல் பரவியதால் போலீசார் நேப்பியர் பாலம் அருகே தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், ஆட்டோவில் ஏறிய அண்ணாமலை கோட்டைக்கு செல்லாமல் தனது காருக்கே சென்றுள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக ஆட்டோவில் ஏறி தனது காருக்கு சென்ற அண்ணாமலை அங்கிருந்து கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதையறியாமல், அண்ணாமலை கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும் பாஜகவினர் சிலர் சாலையில் கொடியுடன் கோசமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில், சிறிது நேரமென பாஜகவினர் கை காண்பிப்பதும், பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் சிரித்துக் கொண்டே இருக்கும் காட்சியை மேற்கொள்காட்டி இவ்வீடியோ ட்ரோல் செய்யபப்பட்டு வருகிறது.
அண்ணாமலையை விடுதலை செய்யக் கோரி பாஜகவினர் சிலர் சாலை மறியலில் ஈடுபடும் வைரல் வீடியோ குறித்து தேடுகையில், அது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், வீடியோவில் சிரித்துக் கொண்டு இருக்கும் பாஜக பெண் நிர்வாகி பெயர் ஜெயமணி என்பதையும் அறிய முடிந்தது.
வணக்கம் திரு சவுக்கு சங்கர் அண்ணா அவர்களுக்கு இதில் நான் சிரித்த முகத்துடன் தான் காணப்படுவான் கோபப்பட மாட்டேன் காவல்துறையினர் எங்களை அடக்கும் போது சிரித்த முகத்துடன் சற்று பொறுங்கள் என்று கூறினேனே தவிர வேறு எவ்வித உள்நோக்கமும் கிடையாது பாஜகவை உயிருக்கும் மேலாக நேசிப்பவள்
— BJB Jeyamani Jeya (@BjbJeya) June 1, 2022
இவரின் வீடியோ வைரலாகுவது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ” இதில் நான் சிரித்த முகத்துடன் தான் காணப்படுவேன் கோபப்பட மாட்டேன். காவல்துறையினர் எங்களை அடக்கும் போது சிரித்த முகத்துடன் சற்று பொறுங்கள் என்று கூறினேனே தவிர வேறு எவ்வித உள்நோக்கமும் கிடையாது. பாஜகவை உயிருக்கும் மேலாக நேசிப்பவள்.
எதிர் முனையில் இருக்கும் காவல் துறையினரையும் மற்றும் திமுகவினர் புன்னகையுடன் எதிர் கொள்ளும் விதமே தவிர நான் காவல்துறையினரை கெஞ்ச வேண்டிய அவசியமில்லை அவர்கள் மீது கொண்ட மரியாதையின் காரணமாக புன்னகையுடன் இந்நிகழ்வை எதிர்கொள்கிறோம். ” என பதிவிட்டு இருக்கிறார்.
இவர் கடந்த தேர்தலில் திருபுவனம் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டவர்.
கைதே ஆகாத அண்ணாமலையை விடுதலை செய்யக் கோரி பாஜகவினர் சிலர் திருப்புவனம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.