பட்டியல் வெளியேற்றம் சரியா விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

” பட்டியல் வெளியேற்றம் சரியா ” எனும் தலைப்பில் யூடர்ன் வெளியிட்ட விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பே இக்கட்டுரை. இதில், தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் சரியா, பட்டியல் வெளியேற்றம் சரியா, ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா என 3 பகுதிகளாக பேசப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் :
தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் வைப்பதில் ” வேளாளர் ” என்பது எங்களுக்கு மட்டும் உரியது, அதை சேர்க்கக்கூடாது என்று வேளாளர் எனப் பயன்படுத்தி கொள்ளும் பல்வேறு சாதியினரும் கூறுகின்றனர். சாதி, வர்க்க பாகுபாடு, ஒடுக்குமுறைகள் அதிகம் இருந்த காலக்கட்டங்களில் நிலத்தை உழுபவனுக்கு எந்த உரிமையும் இல்லை, நிலத்தை வைத்திருப்பவர்களே வேளாளர் எனக் கூறி கொண்டனர். யார் விவசாயி, நிலத்தை வைத்திருப்பவரா அல்லது விவசாய வேலை செய்பவரா..
இவர்கள் நிலத்தில் வேலை செய்தவர்களா எனும் கேள்விக்கு, 1911-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பள்ளர்கள் பல இடங்களில் விவசாய கூலிகளாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. சங்க காலத்தில் இருந்த பாடல்கள் தொடங்கி பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த பல ஆவணங்கள் மூலம் இவர்கள் விவசாயி கூலிகளாக இருந்தது நமக்கு தெரிய வருகிறது.
மேலும், பெயர் மாற்றக் கோரிக்கை இன்று நேற்று எழுந்தது இல்லை. 7 பிரிவினை தேவேந்திர குல வேளாளர் என பொதுவாக அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தவில்லை. அதன்பின் பலமுறை அக்கோரிக்கை வந்துள்ளது.
பாடல் வழியாக பார்க்கையில், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ” பள்ளு இலக்கியம் ” எனும் பாடக் குறிப்பில், ” பள்ளர்களாகிய உழவர் வாழ்க்கைமுறை விளக்கமாக இப்பாடத்தில் சொல்லப்படுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.
பட்டியல் வெளியேற்றம் :
எனது சாதியின் பெயரை இப்படி அழைக்காமல், வேளாளர் என அழைக்க வேண்டும் என கூறுவதில் இருக்கும் நியாயம், பட்டியல் இனம் எனும் பிரிவில் இருந்தே வெளியே வருவதில் இருக்கிறதா.
பட்டியல் இனத்தவர்களுக்கு என சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான கொடுமைகள் 2015-2020-ம் ஆண்டுகளில் 19% அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்து வருகிறது. ஆக, அவர்களுக்கு கல்வியில் முன்னுரிமை மற்றும் சட்டத்தில் பாதுகாப்பு அவசியமாகிறது.
இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா ?
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் உள்ள 89 செயலாளர்களில் 3 எஸ்.டி, 1 தலித், 85 பேர் முன்னேறிய வகுப்பினர் என 2019-ம் ஆண்டு பிரிண்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை.
மத்திய அமைச்சக பணிகளில் இடஒதுக்கீடு முறையில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி-க்கு ஒதுக்கப்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளது. எஸ்.சி-க்கு 7,782 இடங்கள், எஸ்.டி-க்கு 6,903 இடங்கள், ஓபிசிக்கு 10,859 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
அடுத்து, பல்வேறு அரசுத் துறைகளில் குரூப் ஏ, குரூப் பி பணி அடிப்படையில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என பார்க்கையில், ரயில்வே துறையில் மொத்தம் உள்ள 16,381-ல் 68% பொதுப் பிரிவில்(11,273பேர்) உள்ளனர். ஓபிசி 8.05%(1,319), எஸ்.சி 15.57%(2,551) , எஸ்.டி 7.56% (1,238) ஆக உள்ளனர். மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றி இருந்தால் அனைத்திலும் 50% அளவிற்கே பொதுப்பிரிவில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், மனிதவள மேம்பாட்டு அமைக்கம் 66.17%, மத்திய அமைச்சரவை செயலகத்தில் 80.25%, நிதி ஆயோக்கில் 73.84%, குடியரசுத்தலைவர் செயலகத்தில் 97%,யூபிஎஸ்சி-யில் 64.76% என பொதுப் பிரிவில் உள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவலின்படி, ” 40 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையில் 951 பேர் பொதுப் பிரிவில், எஸ்.சி 51 பேர், எஸ்.டி 8 பேர், ஓபிசி வெறும் 9 பேர் மட்டுமே உள்ளனர். அடுத்து இணை பேராசிரியர்களில், பொதுப் பிரிவில் 2352 , எஸ்.சி 141, எஸ்.டி 40, ஓபிசி 31 பேர் உள்ளனர். உதவி பேராசிரியர்களில், பொதுப் பிரிவில் 5055, எஸ்.சி 975, எஸ்.டி 463, ஓபிசி 1267 பேர் உள்ளனர்.
உயர் பதவிகளின் நிலை இப்படி இருக்கையில், முன்பு தானே சாதிக் கொடுமை இருந்தது, இன்றுதான் எல்லாரும் மேலே வந்துடீங்கள் என கதை விடுவது நியாயமா.
இளையதலைமுறை எனும் அமைப்பு ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்களில் 85% பேர் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளையே சார்ந்து இருக்கிறார்கள். 15% பேர் மட்டுமே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அதுவே முன்னேறிய வகுப்பில் 74% பேர் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். 26% மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் படிக்கிறார்கள். அதுவே, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 60% பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 75% பேரும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயில்கின்றனர். ஆக, ஒவ்வொரு பிரிவிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் நிலை எப்படி இருக்கிறது என்ற புரிதல் ஏற்பட்டு இருக்கும்.
Links :
http://lsi.gov.in:8081/jspui/bitstream/123456789/6361/1/46174_1911_REP.pdf
http://www.tamilvu.org/ta/courses-degree-c012-c0124-html-c01243in-15338
https://ncrb.gov.in/sites/default/files/CII%202019%20Volume%202.pdf
Of 89 secretaries in Modi govt, there are just 3 STs, 1 Dalit and no OBCs
Nearly 60 per cent reserved posts vacant in Central ministries
Reservation candidates are under-represented in Govt’s upper rungs
https://pqars.nic.in/annex/251/AU545.doc