This article is from Oct 16, 2019

ஆர்எஸ்எஸ் ஊழியர் குடும்பத்தை கொன்றவர் கைது !| இன்சூரன்ஸ் பணத்தால் நிகழ்ந்த கொடூரம் .

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பந்த் பிரகாஷ் பால் , அவரின் கர்ப்பிணி மனைவி பியூட்டி மோண்டல் பால் மற்றும் அவர்களின் மகன் என மூவரும் அக்டோபர் 8-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இறந்தவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்றும் , அரசியல் நோக்கத்திற்காகவே கொலை நடந்து உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கட்சியை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அம்மாநில எதிர் கட்சிகளும் ஆளும் அரசின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை என கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

பந்த் பிரகாஷ் குடும்பத்தினர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்பட்ட போது , மேற்கு வங்க காவல்துறை அதை முற்றிலும் மறுத்தனர். கொலைக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை , விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தனர். யார் கொலை செய்து இருப்பார்கள் , மதம் சார்ந்த குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்ட தருணத்தில் தற்பொழுது ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணத்தையும் தெரிவித்து இருக்கின்றனர்.

கொலையாளி யார் ?

பந்த் பிரகாஷ் குடும்பம் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன . நள்ளிரவில் ஒருவர் கத்தியுடன் ஓடியதை பார்த்த சிலர் திருடனாக இருப்பான் என நினைத்ததாக கூறி இருந்தனர்.

அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களை மற்றும் பந்த் பிரகாஷ்  செல்போனை ஆய்வு செய்த போது ,  உட்பால் குமார் என்பவர் பந்த் பிரகாஷ் செல்போனிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையில் அவர் பந்த் பிரகாஷ் குடும்பத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 20 வயதான உட்பால் பஹேரா குமார் அவரின் உறவினர் ஆவார்.

கொலைக்கான காரணம் : 

இன்சூரன்ஸ் பணம் மற்றும் தனக்கு நேர்ந்த அவமானத்திற்காக உட்பால் குமார் கொலை செய்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உட்பால் 11 வருடத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துள்ளார். அதற்கு வருட தொகையாக 24, 160 ரூபாயை பிரகாஷ் மூலம் செலுத்தி உள்ளார். முதல் வருடம் பணத்தை கட்டியதற்கு ரசீது வழங்கியது போன்று இரண்டாம் வருடத்திற்கு கட்டிய தொகைக்கு ரசீது வழங்கவில்லை . பிரகாஷிடம் தன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு உட்பால் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி உள்ளது . பிரகாஷ் கடுமையான வார்த்தைகளால் உட்பாலை திட்டி உள்ளார். இதனால் உட்பால் தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவரை கொலை செய்து இருக்கிறார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று பந்த் பிரகாஷ் செல்போனிற்கு அழைத்த உட்பால் நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் . பின்னர் இரவு பந்த் பிரகாஷ் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பந்த் பிரகாஷை கொலை செய்து உள்ளார். பக்கத்து அறையில் இருந்த பிரகாஷின் மனைவி மற்றும் குழந்தையையும் கொலை செய்து விட்டு அங்கிருந்த தப்பி ஓடியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் ஊழியரா ?

பந்த் பிரகாஷ் உடைய தாயார் மாயா பால் இந்தியா டுடேவிற்கு அளித்த தகவலில் , ” என் மகன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை . அவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லை . பள்ளி ஆசிரியராக இருந்த அவனுக்கு அன்றாட பணிகளை செய்வதற்கே போதிய நேரமில்லை . சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தான். அவனுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை ” எனக் கூறி இருந்தார் .

மேற்கு வங்கத்தில் நடந்த மூவர் கொலைக்கு அரசியல் காரணம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், போலீஸ் அதை மறுத்து இருந்தனர். இறுதியாக , கொலையாளி உட்பால் கைது செய்யப்பட்டு உள்ளார். இன்சூரன்ஸ் பணம் தொடர்பாக கொலை அரங்கேறியுள்ளது . மேலும் , பந்த் பிரகாஷ் பால் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் இல்லை என அவரின் தாயார் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Links  : 

Murshidabad triple murder: Family denies political connection, eyewitness reveals new details

Murshidabad triple murder case solved, claim West Bengal police

Please complete the required fields.




Back to top button
loader