சீதையாக கரீனா கபூர் நடிப்பதற்கு உருவான எதிர்ப்புகள்.. படக்குழு விளக்கம் !
இந்திய திரைத்துறையில் சரித்திர கால கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இராமாயணக் கதையை சீதையின் பார்வையில் கதை நகர்வது போல் 3டி தொழில் நுட்பத்தில் திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இத்திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை சீதையாக நடிக்க தேர்வு செய்து உள்ளதாகவும், அதற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதுகுறித்து படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையிலேயே செய்திகள் வெளியாகி வந்தன.
இதையடுத்து, சீதையாக கரீனா கபூர் நடிக்க எதிர்ப்புகள் கிளம்ப துவங்கியது. சீதையாக கரீனா கபூர் நடிப்பதாக தமிழில் வெளியான செய்திகளின் கமெண்ட்களிலேயே பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து பதிவிட்டனர். கரீனா கபூரை புறக்கணிக்க வேண்டும் என ஹாஷ்டாக் உடன் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் மீம்கள், வீடியோக்கள் மூலம் எதிர்ப்புகள் உண்டான. சீதையாக கங்கனாவை நடிக்க வைக்கலாம் எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram
இந்நிலையில், இயக்குனர் ஆலகிக் தேசாய் மற்றும் படக்குழுவினர் ” SITA – The Incarnation ” எனும் இன்ஸ்டா பக்கத்தில், நாங்கள் இன்னும் படப்பிடிப்பிற்கு முந்தைய கட்டத்தில் இருக்கிறோம். சீதையாக கரீனா கபூரை அணுகியதாக வதந்திகள் பரவி வருகிறது. விரைவில் யார் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்படும். இந்த பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
.
இதுகுறித்து, சீதா திரைப்படத்திற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத் அவர்களும், ” எனக்கு தெரிந்த வரை படத்தின் இயக்குனர் ஆலகிக் தேசாய் சீதாவாக நடிக்க கரீனா கபூர் கானிடம் கேட்கவில்லை ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
.
சீதையாக கரீனா கபூர் நடிக்கிறார், 12 கோடி சம்பளம் எனும் செய்திகளுக்கும், அதற்கு எதிராக எழுந்த பதிவுகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் திரைப்படக் குழு தரப்பில் மறுப்பும், விளக்கமும் அளிக்கப்பட்டு இருக்கிறது.