“பட்டாசு இல்லாத தீபாவளி” பேனரால் சர்ச்சை| ஸ்பைஜெட் மறுப்பு.

இந்தியாவில் பெருவாரியான மக்கள் கொண்டாடும் பண்டிகையான தீபாவளி நாளன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக அடிக்கடி குரல் எழுவதுண்டு. அதற்கு , வருடம் முழுவதும் காற்றை மாசுபடுத்தும் போது வராத அக்கறை பண்டிகை நாளான தீபாவளி நாளன்று மட்டும் வருகிறதா என்ற எதிர்ப்பு குரலும் வரும்.
இந்நிலையில், மதுரை விமான நிலையில் பேக்கேஜ் ஸ்க்ரீனிங் பகுதியில் இருந்த பேனரில் ” பட்டாசுகள் வேண்டாம், மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம் ” என்ற வாசகத்துடன் அகல் விளக்கு மற்றும் ஸ்பைஜெட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருந்தது.
பட்டாசுகளுக்கு பெயர் போன ஊரான சிவகாசி மதுரைக்கு அருகே இருப்பதால், ஸ்பைஜெட் நிறுவனம் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனக் கூறுவதாக அந்நிறுவனத்தின் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.
குறிப்பாக, Cockbrand எனும் பிரபல பட்டாசு பிராண்ட் ஸ்பைஜெட் நிறுவனத்தின் பெயருடன் இடம்பெற்ற பட்டாசு குறித்த விளம்பர பலகையின் புகைப்படத்தை பதிவிட்டு,
” உங்களிடம் மாசு ஏற்படுத்தாத விமானங்கள் உள்ளனவா ? தங்களின் விமானங்களில் பயன்படுத்துவது ஒயிட் பெட்ரோலா அல்லது பசுமை எரிபொருளா ? எந்த தைரியத்தில் எங்களின் பட்டாசுத் தொழில் குறித்து பேசுகின்றீர்கள் ? விமானப் பயணங்களால் உமிழப்படும் Co2 ஆனது 285gms/ பயண கிமீ. இதை ரயிலும் ஒப்பிடும் பொழுது ரயிலுக்கு 14 gms/கி.மீ மட்டுமே என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களின் விளம்பரத்திற்காக மற்ற தொழில்களை அழிக்காதீர்கள் ” என தன் முகநூலில் பதிவிட்டதாக வைரலாகியது.
ஆனால், ஸ்ரீ காளிஸ்வரி பட்டாசு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் Cockbrand உடைய அந்த பதிவு அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் காணவில்லை. அவை நீக்கப்பட்டு இருக்கலாம். இதற்கிடையில், சர்ச்சையான பேனர் எங்களால் வைக்கப்படவில்லை என ஸ்பைஜெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
” மதுரை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் ஸ்க்ரீனிங் பகுதியில் பட்டாசு இல்லாத தீபாவளி குறித்து வைக்கப்பட்ட பேனர் ஆனது ஏர்லைன்ஸ் உடைய அனுமதி பெறாமல் ஏர்போர்ட் ஆப்ரேட்டர்களால் வைக்கப்பட்டவை ” என ஸ்பைஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
மேலும், மதுரை விமான நிலையத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பேனர் ஆனது விமான நிலைய அதிகாரிகளின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
சிவகாசி பட்டாசு தொழில் ஆனது ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் நடைபெறுவது. வருடத்தில் ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வருடம் முழுவதும் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டிற்கு அதிகம் வழிவகுக்காத, உள்ளூர் பட்டாசுகளை அறிந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Links :
Madurai Airport “Mess-Up” Triggers SpiceJet-Firecracker Company Spat
‘No cracker’ banner at Madurai Airport sparks row for SpiceJet, airline denies link
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.