ஒரே நாடு ஒரே ரேஷன், வேளாண் சட்டம் அமல்படுத்தும் நிலைக்குழுவில் திமுக எம்பிக்கள் | விமர்சனம் சரியா?

ஒரு தரப்பினர் மீது வேறொரு தரப்பினர் பழி சுமத்துவதும், குறை கூறுவதும் அனைத்து துறைகளிலும் நடக்கும் வழக்கமான ஒன்று. அரசியலும் அதற்கு விதிவிலக்கில்லை. இன்னும் சொல்ல போனால் இத்தகைய கருத்துகள் தான் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு வழிவகுக்கக்கூடியது. அரசியலில் இத்தகைய கருத்துரையாடல்கள் அரசியல் தெளிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இவை அவசியமானதே.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது பக்குவப்படுத்த வேண்டிய ஒன்று. புது தொழில்நுட்பம் என்பதாலேயே அதில் பகிரப்பட கூடிய செய்திகள் எல்லாம் உண்மை என நம்பும் மனநிலை நம் மக்களிடம் இருந்து வருவது மறுக்கப்பட முடியாத உண்மை.
சமூக வலைத்தளங்களில் காணப்படும் அரசியல் சார்ந்த சில செய்திகள் தனி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கான காரணம் அந்த செய்தியில் இருக்கும் உண்மைத் தன்மையே!
ஒரு செய்தியில் கூறப்படும் சில கருத்துக்கள் உண்மையாக இருந்தாலும் அதுவும் அந்த கருத்து ஆதாரத்துடன் கூறப்பட்டால் போதும் அந்த செய்தியில் உள்ள மற்ற கருத்துகளும் உண்மை எனும் பிம்பத்தை எட்டிவிடுகிறது.
உதாரணமாக ,
நேற்று நாம் தமிழர் கட்சியில் பொறுப்பில் உள்ள, சமூக வலைதளங்களில் கணிசமான பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு! ஒரே ரேசன்! எனும் பாஜகவின் ஒற்றைமயத்திட்டத்தை ஆதரித்து அதனை செயல்படுத்தக்கோரும் நாடாளுமன்ற நிலைக்குழுவிலும்,வேளாண் சட்டத்தின் ஒரு அம்சமான அத்தியாவசியப்பொருட்களை நீக்கம் செய்யக்கோரும் நிலைக்குழுவிலும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள்
ஆதாரம் இதோ, pic.twitter.com/reo96k6gqM
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) April 8, 2021
அதில் ஒரே நாடு ஒரே ரேஷன், வேளாண் சட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தும் நிலைக்குழுவில் ( Standing Committee) திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள் என ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை தான் அவர்கள் அங்கம் வகித்துள்ளனர். ஆகவே இச்செய்தியை பகிர்ந்ததில் தவறில்லை எனத் தோன்றுவது இயல்பே.ஆனால் அதற்கு முன்னர் நிலைக்குழு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
நிலைக்குழு (Standing committee) :
இந்திய பாராளுமன்றத்தில் ஒவ்வொரு அமைச்சக துறைக்கும் ஒரு நிலைக்குழு இருக்கும். ஒவ்வொரு குழுவுக்கும் 31 உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 24 குழுக்கள் தற்போது உள்ளன. ஒரு நிலைக்குழுவின் உறுப்பினராக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் அங்கம் வகிப்பார்கள். பாராளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அதற்கான இடங்கள் ஒதுக்கப்படும்.
ஒரு மசோதா அமலுக்கு வரும் முன்னர் அது அந்தந்தத் துறை சார்ந்த நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர், உறுப்பினர்களால் பல்வேறு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சில பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதே நிலைக்குழுவின் பொறுப்பாகும்.
சில உறுப்பினர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவர்கள் அதனை தெரியப்படுத்தலாம். நிலைக்குழு உறுப்பினர்கள் ஒருசேர ஆமோதித்து அறிக்கை வெளியிடாத பட்சத்தில் அரசாங்கம் அந்த பரிந்துரைகளை பெரும்பாலும் புறக்கணித்து விடும்.
குறிப்பு : இந்த செயல் முறையில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட மாட்டாது.
பின்னர் அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான திருத்தங்கள் செய்யும் பொறுப்பும், அதிகாரமும் இரு அவைகளில் உள்ள அனைத்து எம்பிகளுக்கும் உண்டு. இறுதியாக, பாராளுமன்றத்தில் வாக்கு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலே ஒரு மசோதா உறுதி செய்யப்படுகிறது.
ஆகவே ஒரு அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்ற தனக்கு போதுமான செல்வாக்கு பாராளுமன்றத்தில் உள்ளது என்றால் அந்த அரசாங்கத்திற்கு ஒரு மசோதாவை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளது.
விளக்கம் :
ஆகவே, திமுக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சி சார்ந்த எம்பிக்களும் அந்த நிலைக்குழுவில் இருப்பார்கள் என்ற செய்தி ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்பதையும், அவர்களின் நிலைப்பாடு குறித்தான செய்திகள் ஏதும் கிட்டவில்லை என முழு விவரத்தையும் பதிவிட்டிருக்கலாம்.
Links:
RULES RELATING TO THE DEPARTMENT-RELATED PARLIAMENTARY STANDING COMMITTEES
FAQs on the Lok Pal Bill Standing Committee
STANDING COMMITTEE ON FOOD, CONSUMER AFFAIRS AND PUBLIC DISTRIBUTION (2020-2021)