தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியில் இல்லையா ?.. பேட்டியில் சீமான் சொன்ன தவறான தகவல்கள் !

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தி தொலைக்காட்சிக்கு 2022 டிசம்பர் 11ம் தேதி அளித்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. 40 நிமிடம் கொண்ட அந்த முழு நேர்காணலில் 32வது நிமிடத்தில் காசி தமிழ்ச் சங்கமம் குறித்து நெறியாளர் கேள்விக் கேட்கிறார். அக்கேள்விக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்கையில் மொழிகளின் உரிமை குறித்துப் பேசுகிறார்.

வழிபாட்டிலும், வழக்காடு மொழியிலும், எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில மக்களின் மொழி ஆட்சி மொழியாக வர வேண்டும்” எனச் சீமான் கூறுகிறார். அப்போது நெறியாளர் குறுக்கிட்டு “அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழிதான் ஆட்சி மொழியாக உள்ளது “ எனக் குறிப்பிடுகிறார்.  அதற்குச் சீமான் “தமிழ்நாட்டில் ஆட்சி மொழி தமிழில் இல்லை” எனக் கூறுகிறார். 

சீமான் சொல்லுவதை உறுதி செய்து கொள்வதற்காக “நீங்கள் நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் மொழியை சொல்கிறீர்களா?” என நெறியாளர் கேட்கிறார். ஆனால், “தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி இல்லை” எனச் சீமான் உறுதிப்படக் கூறுகிறார்.

“தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழியாக உள்ளது. அரசாணை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தான் வெளியிடப்படுகிறது. சட்டமன்றக் கோப்புகள் எல்லாம் தமிழில் தான் உள்ளது, இன்னும் என்ன வேண்டும் ? என நெறியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்குச் சீமான்  “அங்கீகாரம் இருக்கிறதா என்பதுதான் பேச்சு” எனக் கூறுகிறார். 

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் :

சீமான் பேசியது குறித்து தேடிய போது, தமிழ் மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிவித்து 1956, டிசம்பர் 27ம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் 1957ம் ஆண்டு ஜனவரி மாதம், 23ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சிமொழிக் குழு ஒன்று 1957ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவிற்கு ஆங்கிலத்திலிருந்த அரசு அலுவலக விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகியவற்றைத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. 

எனவே, அக்குழுவின் பணிகள் அனைத்தையும் “தமிழ் வளர்ச்சித் துறை” என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சி மொழித் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டில் 1957ம் ஆண்டு முதல் ஆட்சி மொழியாகத் தமிழ் இருப்பதை அறிய முடிகிறது.

தமிழர்களை பணியமர்த்தக் கூடாது என வட இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்களா ? 

அந்த நேர்காணல் வீடியோவில் 38வது நிமிடத்திற்கு மேல், “ஈரோட்டில் ஒரு தொழிற்சாலைக்கு முன்பாக தமிழர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என வட இந்தியர்கள் போராடினர்” எனச்  சீமான் கூறியுள்ளார். ஆனால், இது உண்மையல்ல.

சீமான் பேசிய செய்தியை உள்ளடக்கிய நியூஸ் கார்டு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

Archive link 

மேலும் படிக்க : கோபி அருகே தமிழர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என வடமாநிலத்தவர்கள் போராட்டம்.. உண்மை என்ன ?

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே வெள்ளாளப்பாளையம் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் தொழிலாளி ஒருவர் காணவில்லை. இதுகுறித்து கோபிச்செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நூற்பாலை நிர்வாகம் தரப்பில் காணாமல் போன தொழிலாளியைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று அங்கு பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிகழ்வினைதான் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை பணியமர்த்தக் கூடாது என தமிழ்நாட்டில் போராடியதாகத் தவறாகப் பரப்பினர். அந்த தவறானச் செய்தியினையே சீமான் நேர்காணலில் பேசியுள்ளார்.

Link :

தமிழ் வளர்ச்சித் துறை

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader