பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு !
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பல இடங்களில் பொய்யான தகவல்களைப் பேசி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். தகவல்கள் மட்டும் இன்றி தலைவர்கள் குறித்தும் வரலாற்று ரீதியான பொய்களையும் பொது மேடைகளில் பேசி வருவது குறித்து யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் பேசிய பொய்களைக் கட்டுரையாகத் தொகுத்து அளிக்கிறோம்.
செப்டம்பர் 2023 :
மருதமலை கோயில் மின்சாரம் :
1962 வரை மருதமலை முருகனைப் பார்க்க வேண்டும் என்றால் மின்சாரம் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என திமுக கொள்கையாகக் கொண்டிருந்தது. அதை உடைத்து மின்சாரம் கொடுத்தது சின்னப்பா தேவர். திமுக சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என அண்ணாமலை கூறினார்.
கல்வீரன்பாளையம் மற்றும் மருதமலை இரண்டு ஊர்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கச் சின்னப்பா தேவர் ‘டிபாசிட்’ தொகையை செலுத்தி அதனைத் தொடக்கி வைக்க எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்துள்ளார். காங்கிரஸ் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியாருடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். தயங்கியுள்ளார். அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் திமுகவும் காங்கிரசும் நேர் எதிர் அரசியல் நிலைப்பாடு கொண்ட கட்சிகளாக இருந்தன.
மக்களுக்குத் தான் மின்சார வசதி செஞ்சு வெக்க போறீங்க; அதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க; தயங்காம வாங்க…’ என்று சின்னப்பா தேவர் கூறியதையடுத்து, எம்ஜிஆரும் நிகழச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1962, டிசம்பர் மாதம் மருதமலை கோயிலுக்கு மின்சாரம் வந்துள்ளது என 2015ல் சின்னப்பா தேவர் பற்றிய தினமலரின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வில் திமுக இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டது போல் ஒரு பொய்யினை இடைசொருகளாக அண்ணாமலை பேசியுள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் திமுக ஆட்சியிலும் இல்லை. மருதமலை கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது எனக் கொள்கையும் கொண்டிருக்கவில்லை.
முதுநிலை மருத்துவ இடங்கள் :
இந்தியாவில் சுமார் 1,80,000-க்கும் மேல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருப்பதாகவும், அவ்விடங்களில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
ஒன்றிய அரசின் இணையதளத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1,07,948 MBBS இடங்கள் மற்றும் 67,802 முதுநிலை இடங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல் 2022-23ம் ஆண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என ஒன்றிய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 64,059 இடங்களில் 4,400 என்பது 6.87 சதவீதம் மட்டுமே.
முழுமையாகப் படிக்க : முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்து அண்ணாமலை சொன்ன பொய்கள் !
அண்ணாதுரையும் முத்துராமலிங்கமும் :
அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது 1956ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தமிழ் மாநாட்டில் மணிமேகலை என்ற சிறுமி மிக அருமையாகத் தமிழ் சங்க இலக்கிய பாடலை பாடினார். அப்போது ‘இந்த பெண் அழகாகப் பாடினார். இதுவே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லிருப்பார்கள் தெரியுமா? உமையவளின் பாலை குடித்துத்தான் இந்த மணிமேகலை பாட்டுப் பாடினார் எனக் கட்டுக்கதையைக் கட்டி விட்டு இருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்து விட்டது. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டார்கள் என அண்ணா பேசுகிறார்’.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் 6ம் நாள் பேச வேண்டிய முத்துராமலிங்கத் தேவர் 5ம் நாளே மேடைக்கு வந்து, ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், யார் இங்கு வந்து உமையவள் பற்றி தவறாகப் பேசியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்து இருக்கிறது, இன்னொரு முறை கடவுள் இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகின்றவர்களைப் பற்றி தவறாகப் பேசினார்கள் என்றால், மீனாட்சி அம்மனுக்கு இரத்தத்தில் அபிஷேகம் நடத்தப்படும்’ என்று சொன்ன பிறகு, பி.டி.ராஜன், அண்ணாதுரை அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி வந்தார்கள் என அண்ணாமலை கூறியிருந்தார்.
ஆனால், பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எழுதிய ‘வீரத்திருமகன் : நேதாஜி- பசும்பொன் தேவர் ஒப்பீடு’, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒர் ஆய்வுக் கண்ணோட்டம்’ ஆகிய எந்த புத்தகத்திலும் அண்ணாமலை சொன்னது போல் வரலாற்று தகவல் இடம்பெறவில்லை.
கடவுள் தொடர்பான விஷயத்தில் இருவருக்கும் மாற்று கருத்துகள் இருந்துள்ளது. ஆனால், மேற்கண்ட நிகழ்வில் மன்னிப்பு கேட்க வேண்டும் என முத்துராமலிங்கத் தேவரும் கூறவில்லை. அண்ணாவும் மன்னிப்பும் கேட்கவில்லை.
முழுமையாகப் படிக்க : முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !
விநாயகர் கிடங்கிற்கு சீல் :
தமிழ்நாட்டில் விநாயகர் சிலை செய்யும் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பண்டிகைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன என்றும் அண்ணாமலை வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரியான கண்ணனை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், ‘அங்குள்ள விநாயகர் சிலைகள் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள் கலந்த கலவையால் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்) செய்யப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். இதையடுத்து விநாயகா் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் கொண்ட கிடங்கிற்கு சீல் வைத்தோம். சிலை தயாரிப்பவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படையக்கூடாது. எனவே விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்த சிலைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” எனக் கூறினார்.
முழுமையாகப் படிக்க : கரூரில் ரசாயனம் கலந்ததால் சீல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை கிடங்கு.. மதரீதியாக பரப்பும் அண்ணாமலை !
உசிலம்பட்டியில் திமுக :
‘உசிலம்பட்டியில் திமுக வெற்றி பெற்றதே கிடையாது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில் இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை’ என அண்ணாமலை பேசி இருந்தார்.
இது இரண்டுமே பொய். 1989ம் ஆண்டு உசிலம்பட்டியில் திமுகவை சேர்ந்த ‘P.N.வல்லரசு’ என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதே போல் 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி காஷ்மீரில், உரி என்னும் பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். 2019, பிப்ரவரி 14ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி துணை இராணுவப் படை வீரர்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, புல்வாமா என்னும் இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
முழுமையாகப் படிக்க : மோடி ஆட்சியில் குண்டு வெடிப்பே நிகழவில்லை, உசிலம்பட்டியில் திமுக வென்றதில்லை என அண்ணாமலை சொன்ன பொய்கள் !
மே 2023 :
ஜல் ஜீவன் :
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 தருவதாகக் கூறினார்கள். ஜல் ஜீவன் திட்டத்தைக் கர்நாடக மாநிலம் 66 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது என அண்ணாமலை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.
கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் ஜல் ஜீவன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு விருது அளித்துள்ளது. அன்றைய தின தரவுகளின்படி தமிழ்நாட்டில் 69.14 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை அளிக்கப்படும் என்ற குறிப்பிட்டிருந்தது. ஆனால், ரூ.2000 என எந்த ஒரு இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை. ரூ.1000 அளிக்கப்படும் என்றே கூறியிருந்தனர்.
முழுமையாகப் படிக்க : தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள் !
மார்ச் 2023 :
ஜெயலலிதா டெபாசிட் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை பேசி இருந்தார். ஆனால், 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனைத் தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும் அவர் தோல்வி அடையவில்லை. அவர் தோல்வி அடைந்தாலும் 50,782 வாக்குகளைப் பெற்றிருந்தார். அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 43 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார். ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை பேசியதும் பொய்.
மேலும் படிக்க : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை சொன்ன பொய் !
ஜனவரி 2023 :
இந்து கோவில்கள் இடிப்பு :
100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்ததை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். இந்த காரணத்திற்காகத் தான் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் கூறுவதாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் 40 வினாடி வீடியோ பதிவிட்டிருந்தார்.
ஆனால் உண்மையில் டி.ஆர்.பாலு “என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கத்தின் போது சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி இந்த மூன்று கோவிலை இடித்தேன். அவர்களுக்கு அதை விடச் சிறந்ததாக, 100, 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் வைத்து புதிய கோவில் கட்டிக் கொடுத்தேன்” எனப் பேசி இருந்தார். அவர் பேசியதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் புரிந்து கொள்ளும்படி அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க : எம்பி டி.ஆர்.பாலு கோவில், மசூதி இடிப்பு பற்றி பேசிய வீடியோவை எடிட் செய்து திரித்து பரப்பும் அண்ணாமலை !
நவம்பர் 2022 :
மணிப்பூர் பாஜக வாக்கு சதவீதம் :
மணிப்பூர் மாநிலத்தில் 2013ல் 0.5 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம், 9 வருடத்தில் 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
ஆனால், 2012ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக 2.12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதே போல், 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 37.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து அண்ணாமலை கூறியது பொய்யான தகவல் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க : மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !
கோவை கார் வெடிப்பு :
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் குறித்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைது செய்யப்பட்ட 6 பேரும் கொச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியிருந்தார்.
ஆனால், 2022, அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல் துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அவ்வழக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது.
அதேபோல் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோயம்புத்தூர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் உள்ள என்.ஐ.ஏ-வின் முதல் FIR பதிவு இந்த வழக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !
அக்டோபர் 2022 :
தமிழ்நாடு உளவுத்துறை :
தமிழ்நாடு உளவுத்துறையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் 60% மேல் ஒரு மதத்தினை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் மிஷினரி போலச் செயல்படுகிறார்கள் என அண்ணாமலை பேசியிருந்தார்.
காவல் கண்காணிப்பாளர் (SP) சரவணன் அவர்கள் அளித்த தரவின்படி, உளவுத்துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), கண்காணிப்பாளர் (SP), ஐஜி , ஐடிஜிபி (ADGP) என மொத்தம் 61 பணியிடங்கள் உள்ளன. அதில் 11 பேர் கிறிஸ்தவ மதத்தினை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை என்பது அண்ணாமலை சொல்லுவதைப் போல, 60 சதவீதம் இல்லை. உண்மையில் அது 18 சதவீதம் என அறிய முடிந்தது.
மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு !
செப்டம்பர் 2022 :
2 லட்சம் வழக்கு :
20,000 புத்தகங்களைத் தான் படித்ததாக அண்ணாமலை பேசியது பெரும் கேலிக்கு உள்ளானது. அதேபோல், “11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் கேஸ் (வழக்கு) போட்டு இருக்கிறேன்” எனக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
11 ஆண்டுகளில் மொத்தம் 4,015 நாட்களே வரும். ஆனால், 5,000 நாட்கள் பணியாற்றியதாகத் தவறாகக் கூறி இருக்கிறார். அவர் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி ராஜினாமா செய்து உள்ளார். ஆக, 9 ஆண்டுகள் (முழுமையாக நிறைவடையவில்லை) மட்டுமே ஐபிஎஸ் பணியிலிருந்துள்ளார். என்சிஆர்பி தரவுகளின்படி 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 12,25,950 ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
அதேபோல், அண்ணாமலை பணியாற்றிய மாவட்ட வாரியாக பதிவான ஐபிசி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்குள் தான் உள்ளது. இதன்படி பார்க்கையில் அவர் சுமார் 20,000 வழக்குகளை மட்டுமே பதிவு செய்திருப்பார். இரண்டு லட்சம் வழக்குள் என அவர் கூறியது பொய்.
மேலும் படிக்க : அன்று 20,000 புத்தகங்கள், இன்று 2 லட்சம் வழக்குகள்.. பொய் பேசி சிக்கும் அண்ணாமலை.. முழுமையான ஆதாரங்கள் !
ஆகஸ்ட் 2022 :
காமன்வெல்த் போட்டி :
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் 61 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்திருந்தது. இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய போட்டிகளில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது என இதுவரை இந்தியா பெறாத இடத்தை பெற்று இருப்பது போலக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்கள் உடன் 3-ம் இடமும், 2014-ல் ஸ்காட்லாந்த்தில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் உடன் 4-ம் இடமும் இந்தியா பெற்றுள்ளது.
முன்னதாக 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2ம் இடம் பிடித்ததே இன்றுவரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்ததாக பொய் சொன்ன அண்ணாமலை !
ஆகஸ்ட் 2020 :
EWS :
அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் EWS-க்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினரும் பயன் பெற முடியும் எனக் கூறி இருந்தார்.
EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு; பொதுப் பிரிவினர் எனும் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் இட ஒதுக்கீட்டைப் பெறுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : EWS இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியுமா ?
இதற்கு முன்பாக, தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் செளதா மணி, முன்னாள் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
மேலும் படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு