தமிழ்நாடு முழுவதும் பரவும் குழந்தை கடத்தல் வதந்தி! எச்சரிக்கும் காவல் துறை!

வட மாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை எனக் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வந்தாலும் அத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. 

முதலில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களது உடல் உறுப்புகள் திருடப்படுவதாக வீடியோக்கள் வாட்சப்பில் பரவியது. இந்த வீடியோவில் உள்ள சம்பவங்கள் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் என யூடர்ன் தளத்தில் விளக்கமாக கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த வதந்தி பரவியதும் இதனை நம்ப வேண்டாமெனச் சென்னை காவல் துறை தரப்பில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.

இருப்பினும் இந்த வதந்தியை உண்மை என நம்பியவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள பம்பலில் திருநங்கை ஒருவரைக் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர் எனச் சந்தேகப்பட்டு அடித்து அவரது ஆடைகளைக் கிழித்தனர். திருநங்கை தாக்கப்பட்டது தொடர்பாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்து இரண்டு நபர்களைக் கைதும் செய்தது. 

இதேபோல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி சென்னை திருவொற்றியூரில் குப்பை அள்ளும் வேலை செய்யும் பீகாரைச் சேர்ந்தவரையும் குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். அதற்கு முன்பாக சென்னை விம்கோ நகரிலும் இதே வதந்தியால் வடமாநில தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளார். 

இத்தகைய சம்பவங்கள் தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் ’இது குறித்து பலமுறை சென்னை காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை செய்தி அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. அது வெறும் வதந்திதான். யாரும் நம்ப வேண்டாம்’ எனப் பதிலளித்துள்ளார். 

இதேபோல் சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் ‘குழந்தை கடத்தல் என வதந்தியைப் பரப்புகின்றனர். யாரும் அதை நம்ப வேண்டாம்’ என ஊடகத்திடம் கூறியதுடன், இந்த வதந்தி தொடர்பாகக் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் விளக்கியுள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் வதந்தி : 

முதலில் சென்னையைச் சுற்றிப் பரவிய வதந்தி தற்போது ஒவ்வொரு மாவட்டம் குறித்தும் தனித்தனியாக ஒரு கதைகளுடன் பரப்பத் தொடங்கியுள்ளனர். அப்படி வாட்சப்பில் பரவும் ஆடியோ வடிவிலான வதந்திகளை நம்ப வேண்டாமென மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், காஞ்சிபுரம் எனப் பல பகுதி காவல் துறையினரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். 

கும்பகோணம் காளிமுத்து நகரில் ஒரு குழந்தை கடத்தப்பட்டதாகப் பரவிய செய்தி குறித்து, பட்டீஸ்வரம் பகுதி துணை ஆய்வாளரை (SI) யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். ’அப்படி எந்த புகாரும் பதிவாகவில்லை. வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் நம்ப வேண்டம்’ என அவர் விளக்கம் அளித்தார். 

குழந்தை கடத்தல் தொடர்பாகப் பொய் செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையும் எச்சரித்திருந்தது. அந்த வகையில் நாகை மற்றும் திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் என வதந்தி பரப்பிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் சிறுமி மாயம் : 

இத்தகைய வதந்திகள் தமிழ்நாடு முழுவதும் பரவி வந்த நிலையில் புதுச்சேரி சோலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை (2ம் தேதி) காணவில்லை என்கிற தகவல் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. 

காணாமல் போன சிறுமியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடியதில், அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அச்சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொன்றிருக்கலாம் எனக் காவல் துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஆனால், சிறுமி காணாமல் போனபோது வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகவே வதந்திகள் பரவியது. 

இத்தகைய வதந்திகள் குறித்துக் காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. சிறுவர்கள் கடத்துவது தொடர்பாகச் சந்தேகம் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள். வதந்தியை நம்ப வேண்டாம்! பரப்ப வேண்டாம்!

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader