வாக்காளருக்கு முதல்வர் பழனிச்சாமி பணம் தருவதாக பரவிய வீடியோ!
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவரிடம் பேசிய பிறகு கையில் பணத்தை கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
சேலத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கச் சென்ற முதல்வர் மற்றும் அக்கட்சியினர் அங்கிருந்த பல கடைகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். அங்கு சந்தையில் இருந்த கடையில் பெண் ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்து வணக்கம் கூறி பேசிக் கொண்டிருந்தார். பின் அருகில் இருந்தவரிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். இந்த காட்சி மட்டுமே சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
தேர்தல் விதிகளின் படி பணம் கொடுப்பது குற்றமாகும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்நிலையில், முதல்வரே ஓட்டுக்கு காசுக் கொடுக்கிறார் என சமூக வலைதளங்கள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் இருந்து முதல்வருக்கு எதிராக கேள்விகளும், கண்டனங்களும் எழுந்தது. ஆனால், இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரல் ஆன காட்சிகளுக்கு முன் நடந்தவை அடங்கிய முழு வீடியோவில், அங்கிருந்த வாழைப்பழக் கடைக்கார பெண் முதல்வருக்கு வாழைப்பழம் சீப் கொடுத்துள்ளார், அதற்கான பணத்தையே தன் பாதுகாவலரிடம் இருந்து வாங்கி செல்லும் பொழுது கொடுத்து விட்டு சென்றுள்ளார் முதல்வர். ஆனால், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
” வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்காமல் எப்படி வருவது. எனக்கு கொடுத்த வாழைப்பழத்திற்கு தான் பணம் கொடுத்தேன் ” என முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.