மக்களவையில் தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட தமிழில் கையெழுத்திடவில்லையா ?

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பின் பொழுது எழுப்பிய ” தமிழ் வாழ்க ” என்ற முழக்கம் அங்குள்ளவர்களை கூச்சலிடச் செய்தது. இதையடுத்து, இந்திய அளவில் தமிழ் வாழ்க என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. ஆனால், தமிழ் வாழ்க என முழங்கியவர்கள் யாரும் தமிழில் கையெழுத்திடாமல், ஆங்கிலத்தில் கையெழுத்திட்டதாக சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தது. தமிழ் வாழ்க என முழங்கிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்வர்கள் மக்களவை உறுப்பினர் புத்தகத்தில் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார்கள். இது பேசும் பொருளாகவே உருவெடுத்தது.
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற எம்.பிக்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழில் கையெழுத்திட்டு உள்ளனர். அதில், மதிமுகவைச் சேர்ந்த எம்.பி ஏ.கணேசமூர்த்தி, திமுகவின் டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ஆகியோர் தமிழில் கையெழுத்திட்டு உள்ளனர்.
ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்புமனு தாக்கலின் பொழுது அளித்த உறுதி மொழிப் பத்திரத்தில் ஆங்கிலத்திலேயே கையெழுத்திட்டு உள்ளனர்.
அதேபோன்று, மக்களவை உறுப்பினர் புத்தகத்தில் தமிழில் கையெழுத்திட்ட கணேசமூர்த்தி, டி.ஆர்.பாலு மற்றும் ஜோதிமணி ஆகியோர் தங்களின் உறுதி மொழிப் பத்திரத்தில் தமிழில் கையெழுத்திட்டு இருந்தனர்.
இவர்களை போன்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜகவின் தலைவர் டாக்டர்.தமிழிசை தன் உறுதி மொழிப் பத்திரத்தில் தமிழில் கையெழுத்திட்டு இருந்தார். ஒருவேளை தமிழிசை எம்பியாக தேர்தெடுக்கப்பட்டு இருந்தால் அவரும் தமிழில் கையெழுத்திட்டு இருக்க வாய்ப்பு இருந்திருக்கும். வேட்பாளர்களாக தேர்தலின் பொழுது அளித்த தங்கள் உறுதி மொழிப் பத்திரத்தில் எந்த மொழியில் கையெழுத்திட்டு உள்ளனரோ, அதில் தான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பதவியேற்பின் பொழுதும் கையெழுத்திட்டு உள்ளனர். சில பதிவுகளில் கூறுவது போன்று தமிழில் பேசியவர்களில் ஒருவர் கூட தமிழில் கையெழுத்திடவில்லை எனக் கூறவிட முடியாது. தமிழகத்தின் சார்பில் மக்களவை சென்ற 38 எம்பிக்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழில் கையெழுதியிட்டு உள்ளனர். எனினும், தமிழை விட ஆங்கிலத்தில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெருமையில்லை. தமி”ழ்” உச்சரிப்பு : மக்களவையில் பேசியவர்களின் ” தமிழ் ” உச்சரிப்பில் பிழைகள் இருந்ததா என்றால் ? ஆம் இருந்தது. ” தமிழ் ” என கூறும் பொழுது ” ழ் ” எனும் சிறப்பு ழகரத்தை கூறாமல் பலரும் ” ல் ” என அழைத்து உள்ளனர். தமிழில் முழக்கங்களை எழுப்பிய தமிழக எம்பிக்கள் ” தமிழ் ” என பேசவில்லை. இதனை பார்க்கும் பொழுது, ” தமிழகத்தில் சுயமரியாதை வளர்ந்துடுச்சு, தமிழ்தான் செத்துடுச்சு ” என பத்திரிகையாளர் துரை அரசு கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. பேசுவதில் தமிழ் என பெருமை கொண்டால் மட்டும் போதுமா ? உச்சரிப்பிலும், கையெழுத்திலும் அதனை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா ! இது அனைவருக்கும் பொருந்தக்கூடியதே . proof : Tamilnadu MPs taking oath Ceremony Karur MP jothimani affidavit kanimozhi karunanidhi affidavit Tamilnadu MP candidates election affidavits
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.