கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் – டாடா ஸ்டீல் !
டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் நிறுவனம் கொரோனா தொற்றால் உயிர் இழந்த தன் ஊழியர்களின் குடும்பத்திற்கு, அந்த ஊழியர்களின் 60 வயதை எட்டும் வரை கடைசியாக அவர்களுக்கு வரையப்பட்ட சம்பளத்தை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
டாடா குழுமத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும், இதில் ஊதியம் மட்டும் அல்லாமல் மருத்துவ சேவைகளும் அடங்கும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்து அதற்கான செய்தி அறிக்கையை வெளியிட்டது.
#TataSteel has taken the path of #AgilityWithCare by extending social security schemes to the family members of the employees affected by #COVID19. While we do our bit, we urge everyone to help others around them in any capacity possible to get through these tough times. pic.twitter.com/AK3TDHyf0H
— Tata Steel (@TataSteelLtd) May 23, 2021
அதில், “டாடா ஸ்டீல் இந்த பயங்கரமான தொற்றுநோய்களின் போது தனது அன்புக்குரிய ஊழியர்களின் சோகமான மறைவில் ஆழ்ந்த இழப்பு உணர்வுடன் ஒன்றாக நிற்கிறது. ஒரு அழகான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மறைந்த எங்கள் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த டாடா ஸ்டீலின் சிறந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் தன் ஊழியர்கள் 60 வயதை எட்டும் வரை கடைசியாக அவர்களுக்கு வரையப்பட்ட சம்பளத்தை வழங்க உள்ளது, இதில் மருத்துவ சலுகைகளும் ,வீட்டு வசதிகளும் அடங்கும்.”
“மேலும், பெருந்தொற்றின் காரணமாக தங்கள் வேலையின் போது துரதிர்ஷ்டவசமான மரணத்தை சந்தித்த அனைத்து முன்கள ஊழியர்களுக்கும், தனது அன்புக்குரிய ஊழியர்களின் குழந்தைகளின் பட்டப் படிப்பு முடிக்கும் வரை அவர்களின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்” என அறிவித்து உள்ளது
“டாடா நிறுவனம் எல்லா நேரங்களிலும் அதன் பங்குதாரர்களை ஆதரிக்கிறது. இந்த நேரமும் வேறுபட்டதல்ல. டாடா ஸ்டீல் குடும்பம் தன் அனைத்து மக்களுடனும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு உறுதியுடன் நிற்கிறது” என செய்தி அறிக்கையை வெளியிட்டது.
இந்தியாவில் எந்த ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களும் முன்னெடுக்காத, ஒரு அவசியமான முன்னெடுப்பை டாடா குழுமம் முன்னெடுத்து இருக்கிறது. மற்ற கார்ப்ரேட் நிறுவனங்கள் தன் ஊழியர்களின் மீதான அக்கறையை இது போன்ற திட்டங்கள் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை என்பதில் ஐயமில்லை.