கொரோனாவை வென்ற 100 வயது கணவரும், 92 வயது மனைவியும்| அரசு மருத்துவமனை சேவை !
கோவிட்-19 தொற்று முழுமையாக நீங்கிவிடாத நிலையில் இந்தியாவில் அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்திகள் கூட மக்களுக்கு பழகிப்போன ஒன்றாக மாறி விட்டது. மறுபுறம் கொரோனா வைரசால் பலரும் பாதிக்கப்பட்டே வருகின்றனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 100 வயது கணவரும், 92 வயது மனைவியும் சிகிச்சைப் பெற்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிய சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த 100 வயது முதியவர் வைத்தியநாதன் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த 4-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவருடைய மனைவி ஜானகிக்கும்(92) அறிகுறிகள், பிரச்சனை இருந்த காரணத்தினால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அக்டோபர் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கணவன் மனைவி இருவருமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக இருந்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த தம்பதிகள் இருவருமே கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது வீடு திரும்பி உள்ளனர்.
மூதாட்டி ஜானகிக்கு சிகிச்சை அளித்த ராஜீவ்காந்தி மருத்துவமனையின் மருத்துவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” 92 வயதான மூதாட்டி ஜானகி கொரோனா உறுதி செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 3 நாட்கள் என் கண்காணிப்பில் இருந்தார். கொரோனா நோயாளிகளுக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்தும், சிகிச்சையும் அளித்தோம். தற்போது அவர்கள் பூரணக் குணமாகி வீடுத் திரும்பி உள்ளார்கள் ” எனக் கூறி இருந்தார்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை மட்டுமின்றி கொரோனா மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் அனுமதிக்கப்பட்டு இருந்த 99 வயது மூதாட்டி உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்கள் ஒரேநாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 வயது முதியவர் உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 27 முதியவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர்.