உரி கவுடா, நஞ்சே கவுடா என மருது பாண்டியர்கள் படங்களைப் பயன்படுத்திய கர்நாடகா பாஜக !

ர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடிக்காக வைக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலில் உரி கவுடா, நஞ்சே கவுடா மகாத்வாரா என்ற பெயர்களுக்கு இருபுறமும் மருது பாண்டியர்களின் படங்களை பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவைச் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதைப் பதிவிட்டு இருக்கிறார.

Twitter link | Archive link 

Archive link 

எப்போது நிகழ்ந்தது ?

2023 மார்ச் 11ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை திறப்பிற்காக வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் பொருட்டு மாண்டியாவில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்களில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா மகாத்வாரா என இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை குறிக்கும் வகையில் இணையத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மருது பாண்டியர்களுக்காக உருவாக்கப்பட்ட படங்களை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த மருது சகோதர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 2022 அக்டோபர் 27ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த மருது பாண்டியர்களின் இதே படத்திற்கு அண்ணாமலை மரியாதை செலுத்தி இருந்தார். இதே படங்களை தற்போது கர்நாடகா பாஜகவினர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா குறித்து வெளியாகும் சில செய்திகளில் கூட மருது சகோதர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் படங்களே தவறாக இடம்பெற்று வருகின்றன.

உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சர்ச்சை : 

1798-99 இடையே நடைபெற்ற நான்காம் ஆங்லோ-மைசூர் போரின் போது பிரிட்டிஷ்கார்களால் திப்பு சுல்தான் கொலை செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். திப்பு சுல்தான் இறந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கர்நாடகாவில் அரசியல்ரீதியாக திப்பு சுல்தான் பெயரை பாஜக பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், மாண்டியா மாவட்டம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கன்னட எழுத்தாளர் ஜவரேக கவுடா என்பவர் எழுதிய ‘சுவர்ண மாண்டியா’ எனும் புத்தகத்தில் ஒக்கலிகா தலைவர்கள் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் திப்பு சுல்தானுக்கு எதிராக போராடியதாக குறிப்பிட்டு இருந்தார். இதை அடிப்படையாக வைத்து திப்பு சுல்தானை கொன்றதாக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை பாஜகவினர் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

ஆனால், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா முற்றிலும் உருவாக்கப்பட்ட புனைவு கதை என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கர்நாடகா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

எனினும், பாஜகவின் சி.டி.ரவி, உரி கவுடா மற்றும் நெஞ்சே கவுடா புனையப்பட்டது அல்ல. அவர்கள் திப்பு சுல்தானைக் கொன்றார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்து இருக்கிறார்.

இதற்கிடையில், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா பற்றி திரைப்படம் உருவாக்க உள்ளதாக கர்நாடகா பாஜக அமைச்சரும், தயாரிப்பாளருமான முனிரத்னா அறிவித்து இருந்தார். ஆனால், மார்ச் 20ம் தேதி மாண்டியாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் பிரபல ஒக்கலிகா சீர் நிர்மலானந்த சுவாமியுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு திரைப்படம் எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.
.
கர்நாடகாவில் திப்பு சுல்தானுக்கு எதிராக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை பாஜக கையில் எடுத்து சர்ச்சையாகி பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. மேலும், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை குறிக்கும் வகையில் மருது பாண்டியர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் படங்களை தவறாகப் பயன்படுத்தி மேலும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Links : 
Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader