This article is from Sep 30, 2018

வாட்ஸ் ஆஃப் வதந்திகளால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்..!

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை உண்மை என நினைத்து பகிரும் ஒவ்வொரு பகிர்வால் என்ன ஆகிவிடப்போகிறது என்று சாதாரணமாக நினைக்கின்றனர். அந்த பகிர்வால் ஏதோ ஒரு இடத்தில் ஒருவரின் உயிர் போகும் நிலை உருவாகும் என்பதை இங்கு யாரும் அறியாமல் உள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா :

சமூக வலைத்தளங்களில் பரவும் சில வதந்திகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் கிராமப்புற மக்களை கும்பலாக தாக்குதலை நடத்தும் நிலைக்கு மாற்றியுள்ளது. குழந்தைகளை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கும்பல் வலம் வருகிறதாகக் கூறி பரவும் வாட்ஸ் ஆஃப் வதந்திகள் பலரின் உயிரைப் பறித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் வாட்ஸ் ஆஃப் வதந்திகள் ஏற்படுத்திய அச்சத்தால் மூன்று பேர் தாக்கபட்டனர் மற்றும் நான்கு பேரை கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் வதந்தியால் 4 நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வதந்திகள் இரு மாநிலங்களின் கிராமப்புற மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களில் குறைந்தது 10 பேரை மரத்தில், மின் கம்பம் போன்றவற்றில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். அதில் பலர் கவலைக்கிடமாக இருந்துள்ளனர். குழந்தை கடத்துபவர்கள் என்று நினைத்து குண்டூரில் பெண் ஒருவரையும், Sarapaka பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பேசமுடியாத ஒருவரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதை அறிந்து வந்த போலீசார் அவரை காப்பாற்றினார்கள். இது போன்ற சம்பவங்கள் விக்ரபாத், நிசாமாபாத், யாத்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன.

வதந்திகளால் கும்பலாக சேர்ந்து அப்பாவி மக்களை தாக்குவது ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகர்ப்புறத்தையும் விட்டு வைக்கவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஹைதராபாத் கவுன்சிலர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதேபோன்று குழந்தை கடத்தும் கும்பல் என்ற வாட்ஸ் ஆஃப் வதந்திகள் விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளிலும் அதிவேகமாக பரவியுள்ளது.

கர்நாடகா மாநிலம் :

கர்நாடகா பெங்களூர் பகுதியில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த குழந்தை கடத்தும் கும்பல் சுற்றி வருவதாகக் கூறி பரவிய வாட்ஸ் ஆஃப் வதந்தியால் 26 வயது இளைஞரை குழந்தை கடத்த வந்தவர் என்று மக்கள் தவறாக நினைத்து கும்பலாக தாக்கியதில் இறந்துள்ளார். ஒரு வதந்தியை உண்மை என நினைத்து தாக்கியதில் அந்த இளைஞரை சாகும்வரை தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் ராஜஸ்தானில் இருந்து பான் விற்பனை செய்ய வந்த கலுராம் என்பவர் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலை நடத்திய 14 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், 18 வயது நிரம்பாத 2  பேர் மற்றும் 4 பெண்கள் உள்ளனர்.

மே 16-ம் தேதி கர்நாடகாவின் ராய்ச்சூர் காவல்துறைக்கு குழந்தை கடத்தும் நபர் என நினைத்து பெண் ஒருவரை தாக்குவதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு தான் தெரிய வந்தது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று, இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீஸ் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் வதந்தி :

ஜார்கண்ட் உள்ளிட்ட வட நாட்டில் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் வாட்ஸ் ஆஃப் வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அப்பாவி வெளிமாநில மக்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகம் அரங்கேறுகிறது.

மே 8-ம் தேதி தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள கிராமத்தில் காரில் முகவரி விசாரித்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பரவிய வதந்தியால் அவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது வதந்தி குறித்த விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்தியது. இதை போன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம் போன்ற பகுதிகளில் வெளிமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது அதிகம் நடந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வதந்தியால் தாக்கியதில் 3 பேர் இறந்துள்ளனர். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் குழந்தை கடத்தும் கும்பல் என்ற வதந்திகள் தொடர்பாக காவல்துறை தரப்பிலும் மக்களுக்கு பலர்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை யாரேனும் ஒருவரின் மீது சந்தேகம் இருந்தால் அவரை போலீசிடம் ஒப்படைப்பதே சிறந்தது. அதை விடுத்து கும்பலாக உயிர் போகும்வரை தாக்குவது மனிதநேயமற்ற செயலாகும். வீண் வதந்திகளை பகிர்வதற்கு முன்பாக இது போன்ற சம்பவங்களை நினைவில் வைக்கவும்.

4 killed in a week child lifting rumors go viral 

Please complete the required fields.




Back to top button
loader