உ.பி தேர்தல் : எடிட் செய்த படத்தை பதிவிட்ட யோகி ஆதித்யநாத் ட்விட்டர் பக்கம் !
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்தக் கட்ட தேர்தலுக்காக பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ” உத்தரப் பிரதேசத்தின் எதாவா மாவட்டம் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளதாக ” யோகி ஆதித்யநாத் கூட்டத்தைப் பார்த்து கை அசைப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட படத்தில் யோகி ஆதித்யநாத் மக்களைப் பார்த்து கை அசைக்க, மக்களோ வேறொரு பக்கம் கை அசைப்பது போல் இடம்பெற்று இருக்கிறது.
2021 டிசம்பர் 19-ம் தேதி யோகி ஆதித்யநாத் ட்விட்டர் பக்கத்தில் பதிவான பிரச்சாரத்தின் போது யோகி ஆதித்யநாத் மக்களை பார்த்து கை அசைப்பதை போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது எடிட் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சமீபத்தில் எதாவா மாவட்டத்தில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட ஆதரவாளர்கள் புகைப்படத்தில் அவரின் புகைப்படத்தை ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்து இருக்கிறார்கள். ஆனால், எதற்காக இப்படி எடிட் செய்தார்கள் எனத் தெரியவில்லை.
झूठ और फर्जीवाड़े की बुनियाद पर खड़ा भाजपाई किला अपने आखिरी दिन गिन रहा है। pic.twitter.com/bbktWaSIcI
— Congress (@INCIndia) February 16, 2022
வைரலான யோகி ஆதித்யநாத் புகைப்படம், நொய்டா விமான நிலையம் என சீன விமான நிலையத்தை வெளியிட்டது உள்ளிட்ட புகைப்படங்களை இந்திய தேசிய காங்கிரஸ் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டு பாஜகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : பாஜக தலைவர்கள் பகிர்ந்த நொய்டா விமான நிலைய வீடியோவில் சீனா, தென் கொரியா படங்கள் !
உத்தரப் பிரதேச பாஜக எதற்காக இப்படி எடிட் செய்தார்கள் என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதால் ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதை யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பதிவிலும் சிலர் பதிவிட்டு வந்தாலும், அந்த பதிவு தற்போதுவரை நீக்கப்படவில்லை.