பிரதமரின் வேண்டுகோளுக்கு நாசாவுடன் தொடர்பா ?| வாட்ஸ் அப் ஃபார்வர்டுகள்.
பரவிய செய்தி
2020 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9.09 வரை ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் அமையும் என நாசா உறுதி செய்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் இரண்டாம் முறை உரையாற்றிய போது ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகள், செல்போன் லைட், டார்ச்லைட், மெழுகுவர்த்தி உள்ளிட்டவையை ஏற்றுமாறு வேண்டுகோள் வைத்தார்.
அதன்மூலம், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தாலும் நாம் தனியாக இல்லை ஒற்றுமையாக உள்ளோம் என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் இதனை செய்யுமாறு கூறியிருந்தார்.
பிரதமரின் வேண்டுகோள் ஒருபுறம் கிண்டலுக்கு உள்ளாகி மீம்ஸ்களாக வெளியாகின. மறுபுறம், ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை பிரதமர் அணைக்க சொன்னதற்கு பின்னால் ஆன்மீகம் சார்ந்த அறிவியல் காரணங்கள் இருப்பதாக பல்வேறு மீம்ஸ், சமூக வலைதள பதிவுகளை காண நேரிட்டது. அவற்றின் தொகுப்பே இக்கட்டுரை.
If you look out your window this evening, you might be rewarded with a brilliant view of Venus, which will pass near a star cluster known as the Pleiades. Don’t miss your chance — Venus won’t make another appearance this close to the Pleiades until 2028: https://t.co/nUPLUgnaT0 pic.twitter.com/FKGLja2Svv
— NASA (@NASA) April 3, 2020
ஏப்ரல் 3-ம் தேதி நாசா வெளியிட்ட ட்வீட் பதிவில், வீனஸ் கிரகத்தின் அருமையான காட்சியை காணத் தவறாதீர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாசாவின் பெயரை பயன்படுத்தி வைரலாகும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல் முற்றிலும் வதந்தியே. ஏப்ரல் 5-ம் தேதி 9 கிரகங்கள் ஒன்றாக நேர்கோட்டில் இருக்கும் என நாசா எங்கும் தெரிவிக்கவில்லை
சில ட்விட்டர் பதிவுகள் மற்றும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவலில் நாசா ஆராய்ச்சி செய்து கூறியதாகவும், கிரகங்கள், நட்சத்திரங்களின் பெயர்களையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கூறி இருக்கிறார்கள்.
இவை தவிர்த்து கோடிக்கணக்கான மக்கள் அகல் விளக்கை ஏற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிலர் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் நாசாவின் பெயரை பயன்படுத்தும் முறையை பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : ஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.
இந்தியாவில் ஒரே நேரத்தில் மின் விளக்குகள், மின் சாதனங்களை அணைத்தால் மின்சார பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் மக்கள் வீடுகளில் உள்ள மின் சாதனங்களை அணைக்க வேண்டாம், விளக்குகளை மட்டும் அணைக்கவும் என மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.