சிங்கப்பூர் அரசு ஒரு மில்லியன் டாலர் நோட்டை வெளியிட்டதா ?
பரவிய செய்தி
சிங்கப்பூர் நாட்டின் அரசாங்கம் புதிய ஒரு மில்லியன் டாலர் நோட்டை வெளியிட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
சிங்கப்பூரில் அதிகபட்ச பணமதிப்பு 10,000 டாலர்கள் மட்டுமே ஆகும். எனினும், நாட்டில் நடக்கும் பணமோசடியின் காரணமாக 10,000 டாலர்களை அச்சடிக்கும் பணியை 2014-ல் அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.
விளக்கம்
செல்வவளமிக்க நாடாக வளர்ந்து உள்ள சிங்கப்பூர் தேசத்தில் சிங்கப்பூர் டாலர்கள் என்ற நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. சிங்கப்பூர் அரசாங்கம் புதிய ஒரு மில்லியன் டாலர் நோட்டை வெளியிட்டுள்ளது என்ற படங்களுடன் கூடிய செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் நாட்டில் வணிக நிறுவனத்திற்கு சென்ற ஒருவர் மூன்று டாலர்களுக்கு பொருட்கள் வாங்கி ஒரு மில்லியன் டாலர் நோட்டை அளித்ததாக நியூ நேஷன்என்ற இணையதளம் தனது வலைதளத்தில் 2013 ஆம் ஆண்டில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் வர்த்தகம் பெருமளவில் இருப்பதால் பணத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இவ்வாறு செய்ததாகக் அந்த இணையதளத்தில் கூறியுள்ளார்கள்.
ஆனால், சிங்கப்பூரில் ஒரு மில்லியன் டாலர்கள் என்ற மதிப்பில் எத்தகைய நோட்டுகளையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை. சிங்கப்பூர் நாட்டின் புதிய ஒரு மில்லியன் டாலர் எனக் கூறும் நோட்டுகள் பார்ப்பதற்கு அழகாகவும், நம்பக்கூடிய வகையில் இருந்தாலும் அவைகள் அனைத்தும் போலியானவை என்பதே உண்மை.
சிங்கப்பூரின் அதிகபட்ச பணமதிப்பு என்று பார்த்தால் 10,000 டாலர்கள் மதிப்பு கொண்ட நோட்டுகளே இருந்து வருகிறது. இருப்பினும், அத்தகைய டாலர் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை 2014-ல் அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியுள்ளது. கடத்தல், சூதாட்டம் போன்ற குற்றங்களை செய்வர்களுக்கு அதிக மதிப்புடைய 10,000 டாலர் நோட்டுகள் அதிகளவில் பயன்படுவதாகவும், கள்ளச் சந்தை வியாபாரத்திற்கு உதவுவதால் அந்நோட்டை அச்சடிக்கும் பணியை நிறுத்துவதாக கூறியுள்ளனர். இருப்பினும், நாட்டின் புழக்கத்தில் உள்ள 10,000 டாலர்கள் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வத் தகவலை அரசு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டைப் பொறுத்த வரை அந்நாட்டின் 2, 5, 10, 50, 100, 1000, 10,000 என்ற டாலர் நோட்டுகள் சிங்கப்பூர் தேசத்தின் முதல் அதிபரான “யூசோஃப் பின் இசாக்” அவர்களின் புகைப்படம் , கப்பல், பறவை, ஆர்க்கிட் போன்ற வகைகளில் அச்சிடப்பட்டிற்கும் . ஆனால், இந்த நோட்டில் அது போன்ற எந்தவொரு படங்களும் இல்லை. மேலும், செக்யூரிட்டி திரட் என்ற கோடுகள் அனைத்து டாலர் நோட்டுகளிலும் உள்ளன. இவையும் இந்த நோட்டுகளில் இடம்பெறவில்லை. இது போன்று பல அடையாளங்களை கொண்டு ஒரு மில்லியன் நோட்டுகள் போலியானவை என்று அறியலாம்.