சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு.

பரவிய செய்தி
உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தமிழ்ப் பல்கலைகழத்தின் வாயிலாக, தைவான் நாட்டின் கவிஞரான யூ ஷி என்பவரால் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2014-ம் ஆண்டில் சீன மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிட்டனர்.
விளக்கம்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2010-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாராட்டு விழாவில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார். அந்நேரத்தில், கலாம் ஐயா தைவான் நாட்டின் சிறந்த கவிஞரான யூ ஷி-யிடம் திருக்குறளின் நகல்களை கொடுத்து சீன மொழியில் மொழி பெயர்க்குமாறு பரிந்துரை செய்தார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த யூ ஷி ஒரு புத்த துறவி ஆவார். அவரின் கவிதைகள் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளன. எனவே திருக்குறள் நூலானது யூ ஷி-யின் மூலம் சீன மொழியில் மொழிப் பெயர்க்கப்படுவதே சிறந்தது என்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
” தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நீதி இலக்கியமான வள்ளுவரின் திருக்குறளை சீன மொழியில் மொழிப் பெயர்க்க மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ரூ 41.70 லட்சம் நிதி ஒதுக்கி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக செயல்படுத்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார் “.
இந்த சீன மொழி பெயர்ப்புப் பணி, 2012-ன் டிசம்பர் மாதத்தில் யூ ஷி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், திருக்குறளின் ஆங்கில மொழிப் பெயர்ப்பு நூல்களும் அவரிடம் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, திருக்குறளின் சீன மொழிப் பெயர்ப்பை தொடங்கிய யூ ஷி ஓராண்டுக்குள் அதன் பணிகளை முழுவதுமாக நிறைவு செய்தார். திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பானது, இலக்கண மாற்றமின்றி மற்றும் கடினமில்லாத ஒன்றாக அமைத்துள்ளது. இந்நிலையில் 2014-ல் அதன் அச்சுப் பணிகள் தொடங்கின. இறுதியில் புத்தக வடிவில் வெளியிடவும் செய்தனர்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை கூறியிருந்தது என்னவென்றால், “ உலகம் மேன்மை அடைய தேவையான உயர்ந்த சிந்தனைகள் கொண்ட இலக்கியம் திருக்குறள். அதன் மொழிப் பெயர்ப்பு பணி எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என்று யூ ஷி உணர்ச்சி மேலோங்க கூறினார். மேலும், யூ ஷி-யிடம் திருக்குறள் மட்டுமின்றி பாரதியார் மற்றும் பாரதிதாசனின் சிறந்த பாடல்கள் பலவற்றையும் சீன மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்யும் பணியை அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழின் மிகப்பழமையான இலக்கிய நூலான திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.