தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டாரா ?
பரவிய செய்தி
திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வரும் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மதிப்பீடு
சுருக்கம்
போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இரு இணையதளத்தின் அட்மின் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளக்கம்
செப்டம்பர் 12 ம் தேதி இரவில் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழ்ராக்கர்ஸ் அட்மின் சென்னையில் கைது செய்யப்பட்டார் என்பது தான்.
திரைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வது சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எனினும், படங்கள் திரைக்கு வந்து சில நாட்களுக்கு பிறகே இணையங்களில் மக்கள் பார்த்து வந்தனர். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளத்தின் வருகைக்கு பிறகு புதிய திரைப்படங்களை, படங்கள் வெளியாகிய சிறிது நாட்களிலே இணையத்தில் பார்க்கும் செயலை செய்தனர். அதன் பிறகு தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம் மிகவும் பிரபலமாகியது.
தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞன் 100 மேற்பட்ட புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், இவரே தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் என்று காவல்துறைக்கு திரைத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருவல்லிக்கேணி காவலர்கள் அவரை கைது செய்தனர். காவல்துறையின் விசாரணைக்கு பிறகே முழுவிவரங்களை தெரிவிக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.
இதன் பின்னர் கைதானவர் புதிய திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் என்றும், அதேபோன்று மற்றொரு இணையதளமான தமிழ்கன் தளத்தின் அட்மின் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், விசாரணையில் கைது செய்யப்பட்டவர் அந்த இரு இணையதளத்தின் அட்மின் இல்லை என்று கூறினர். எனினும் கைதானவர் மற்றொரு பிரபலமான இணையதளத்தின் மூலம் திரைப்படங்களை பதிவேற்றம் செய்தவர் என்று மட்டும் தெரியவந்துள்ளது.
தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் தளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டார் என்ற செய்திக்கு அந்த இணையதளமே மறுப்பு தெரிவித்தது. மேலும் தங்கள் தளத்தின் பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களை கைது செய்ய வேண்டாம் என்று தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தமிழ்ராக்கர்ஸின் இந்த பதிவுக்கு மக்கள் பலர் ஆதரவு தெரிவித்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டனர்.