அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு.
பரவிய செய்தி
அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
நிலக்கரிச் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் கடற்கரையில் ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளக்கம்
இந்தியாவை சேர்ந்த சுரங்கத் தொழில் நிறுவனமான அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மிகப்பெரிய கார்மைக்கல் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கான ஒப்புதலானது சுற்றுச்சூழல் மற்றும் நிதியியல் போன்ற பிரச்சனைகளைக் கருத்தில்கொன்டு தாமதமாகியது. இருப்பினும், கடந்த ஜூன் மாதம் அதானியின் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதற்கிடையில், அதானியின் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கத் திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதானியின் நிலக்கரிச் சுரங்கத் திட்டம் அந்நாட்டிலேயே மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமாக அமையவுள்ளது. இத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் பெரும் ஆதரவு இருப்பதாக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர். மேலும் இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று அதானி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நிலக்கரிச் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என்றும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் என்பதால் அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டம் பற்றி குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, அதானியின் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 7-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் போண்டி கடற்கரை, சிட்னி, மெல்போர்ன் போன்ற பல இடங்களி ல் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் STOP ADANI, ADANI GO TO HOME போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மேலும், அங்குள்ள கடற்கரை மணலில், மக்கள் STOP ADANI என்ற எழுத்தின் வடிவில் ஒன்று கூடி இணைந்து நிற்பதை வானத்தில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. மேலும், அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதானியின் உருவத்தைப் போன்று சிலர் வேடமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உலக வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகளால் நாம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். ஆகையால், இதுபோன்ற நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தால் நாட்டில் காலநிலை மாற்றங்கள் மற்றும் நாட்டின் வளங்கள் பாதிக்கப்படும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.