அமெரிக்காவில் வேட்டி அணிந்து விமானம் ஓட்டிய ஒரே தமிழன்.
பரவிய செய்தி
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து விமானத்தை இயக்கிய தமிழர். தமிழன் என்று பெருமை கொள்ள வைத்த இளைஞனுக்கு நன்றி.
மதிப்பீடு
சுருக்கம்
ஈழத் தமிழரான ரவிகரன் ரணேந்திரன் அமெரிக்காவில் வானூர்தி பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார். தனது பாரம்பரிய உடையில் விமானத்தை இயக்க வேண்டும் என்று சண்டையிட்டு அனுமதி வாங்கி விமானத்தை இயக்கியுள்ளார். பிற மொழி கலப்பில்லாமல் தமிழில் உரையாடுவது இவரின் சிறப்பாகும்.
விளக்கம்
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய பண்டிகை நாட்களில் மட்டுமே வேட்டி உடையணிந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், விமானத்தையே வேட்டி அணிந்து தான் இயக்குவேன் என்று அடம் பிடித்து அனுமதி வாங்கி வேட்டியணிந்தே விமானத்தை இயக்கிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வானூர்தி பல்கலைகழகத்தில் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக பயின்று வருபவர் ரவிகரன் ரணேந்திரன். ஈழத்தமிழரான ரவிகரன் முல்லை நிலத்தின் மைந்தன் ஆவார். வானூர்தி பல்கலைகழகத்தில் பயின்று வரும் ரவிகரன் “ அகரன் ” என்ற ஏவுகணையை உருவாக்கியவர்.
பிற மொழிகளின் கலப்பில்லாமல் தமிழ் மொழில் உரையாடுவது இவரது சிறப்பு ஆகும். இத்தகைய திறமைகளை கொண்ட ரவிகரனுக்கு தனது பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து விமானத்தை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ரவிகரன் எளிதில் பின்வாங்குவதாக இல்லை. என் பாரம்பரிய உடையை அணிந்து விமானத்தை இயக்க ஏன் மறுக்கிறீர்கள் ? என்று சண்டையிட்டு அனுமதி வாங்கி வேட்டி அணிந்து விமானத்தை இயக்கியுள்ளார். வேட்டி அணிந்து விமானத்தை இயக்கி ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
ரவிகரன் ரணேந்திரன் தமது ஏவுகணையின் வெற்றி பற்றி கூறுகையில், தொடர்ச்சியான செயல்திட்டங்களின் முதல் படியாக எனது ஏவுகணைச் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக மிகக்கடினமாக உழைத்து “ அகரன் ” ஏவுகணையை உருவாக்கி உள்ளேன். இவை ஒரு மாதிரி ஏவுகணை முயற்சி ஆகும். இவற்றைக் கொண்டு மிகவும் திறன் உடைய ஏவுகணைகளை எளிதில் உருவாக்க இயலும்.
ஏவுகணைகளின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நான் தேர்ந்தெடுத்த முறைகளில் இந்த ஏவுகணை அதிக வினைத்திறன் கொண்டது என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வேட்டியணிந்து விமானத்தை இயக்கிய இளைஞரின் செயலானது தமிழ் மக்களிடையே எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பரந்த உலகில் சிதறிக்கிடந்தாலும் தம் பாரம்பரியத்தை மறவா மக்களும் வாழ்ந்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.