இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியதா ?
பரவிய செய்தி
இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் பெருகி விட்டதால் இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது ரஷ்யா.
மதிப்பீடு
சுருக்கம்
ரஷ்யா ஒரு போதும் இந்தியாவிற்கு எதிராக இது போன்ற ஆலோசனைகளை வழங்கவில்லை, இந்தியா ரஷ்யாவிற்கு நட்பு நாடாகும் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
விளக்கம்
கோவாவில் உள்ள ரஷ்ய தகவல் மையம் ரஷ்ய பயணிகளின் சுற்றுலா குறித்த ஆலோசனைகள் பற்றிய தகவலில் எகிப்து மற்றும் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை செய்துள்ளதாகவும், இதில் இந்தியாவின் கோவா பகுதியும் இடம் பெற்றுள்ளதாகவும் நவம்பர் 29, 2015-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானதாக கூறி இந்தியா டுடே பத்திரிகை தனது வலைதளத்தில் வெளியிட்டது.
மேலும், ரஷ்யா மக்களுக்கான பாதுகாப்பான சுற்றுலா தலங்களின் பட்டியலில் கோவாவை நீக்கியதற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்று கூறுவது தவறு. உள்ளூர் பகுதியில் நிகழும் சில அருவருப்பான செயல்களால் இவ்வாறு செய்துள்ளது. எனவே இந்தியா மற்றும் கோவா பகுதிகள் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு பாதுப்பான இடங்களாக கருத முடியாது என்று ரஷ்ய தகவல் மையம் உயர் அதிகாரி கூறியதாகவும் வெளியாகி இருந்தது.
ஆனால், ரஷ்யா ஒரு போதும் இந்தியாவிற்கு எதிராக இது போன்ற ஆலோசனைகளை வழங்கவில்லை என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்ததாக நவம்பர் 30, 2015-ல் இந்தியா டுடே பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு காலக்கட்டத்தில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலா செல்லும் நாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்தியாவிற்கு ரஷ்ய பயணிகள் செல்ல கூடாது என்று ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறியதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. ரஷ்யா மற்றும் இந்தியா நட்புறவு கொண்ட நாடுகள் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2015-2016-க்கு இடைப்பட்ட சுற்றுலா பருவக் காலத்தில் 1,50,000 அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இன்று வரை ரஷ்ய பயணிகள் இந்தியா வருவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளதாகவும், இதற்கு காரணம் நாட்டில் நிலவும் இந்துத்துவ பயங்கரவாதமே என்று வதந்திகள் பரவி வருகிறது.