இரயிலைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ததாகப் பரப்பப்படும் ரயில் விபத்து வீடியோ !

பரவிய செய்தி

ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்வதெல்லாம் இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத சாதனையே.. நன்றி மோடி ஜி 

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இரயில் ஒன்று பாதி வழியில் நின்று விட்டதால் அதனை ராணுவ வீரர்கள், ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் இறங்கித் தள்ளியதாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதே தகவலை குமுதம் ரிப்போட்டர் போன்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

Archive link

Twitter link

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அது தெலுங்கானாவில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது. 

கடந்த 7ம் தேதி (ஜூலை) மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா செகந்திராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் தெலங்கானாவில் உள்ள பகிடிபல்லி – பொம்மைய்யபல்லி பகுதிக்கு இடையே வரும்போது எஸ் 4, எஸ் 5 ஆகிய பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பயணிகள் கவனித்து ரயிலை நிறுத்துவதற்குள் 6 பெட்டிகளுக்கு தீ பரவியுள்ளது.

இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசையில்’ வெளியான செய்தியில், தீ பிடித்த பெட்டிகளையும் மற்றப் பெட்டிகளையும் ரயில்வே பணியாளர்கள் தனியாகக் கழற்றிவிட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link  

பாதி வழியில் நின்றுவிட்ட ரயிலை இராணுவ வீரர்கள் இறங்கித் தள்ளியதாகப் பரவும் செய்திக்கு ‘PIB Fact Check’ (Press Information Bureau) தங்களது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதில், பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலை ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ததாக வீடியோ ஒன்று வைரலாகிறது. அது உண்மை அல்ல. ரயில் தீ பிடித்த சம்பவம் தவறாகப் பரப்பப்படுகிறது. ரயிலின் மற்ற பெட்டிகளைத் தீயிலிருந்து காப்பாற்ற உடனடியாக தனி இன்ஜின் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், புதிய இன்ஜின் வரும் வரை காத்திருக்காமல் காவல் துறையினர், ராணுவத்தினர், ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  தங்கள் முயற்சியால் மற்ற பெட்டிகளைப் பிரித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் இருந்து பாதி வழியில் நின்று விட்டதால் ரயிலைத் தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

Archive link

பரவிய வீடியோ தொடர்பான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் மற்றும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக மேற்கண்ட இதே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Archive link

முடிவு : 

நம் தேடலில், பாதியில் நின்றுவிட்ட ரயிலைத் தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் தகவல் தவறானது. ரயிலின் சில பெட்டிகள் தீ பிடித்ததையடுத்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க பொது மக்கள் மற்றும் இராணுவ பணியாளர்களால்  ரயிலின் பெட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader