This article is from Feb 28, 2018

ஏர்செல் தன் சேவையை பிப்ரவரி 28-ல் நிறுத்தி கொள்கிறதா ?

பரவிய செய்தி

ஏர்செல் வாடிக்கையாளர்களே உஷார் !! தொடர் நஷ்டத்தின் காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திவிட்டது. டவரை off செய்துவிட்ட காரணத்தால் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாமல் தவித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள அனைத்து AIRCEL டவரும் 28/2/2018 அன்று OFF செய்யப்படும். பின்னர் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பரை இழக்க நேரிடும். எனவே ஓரிரு தினங்களுக்குள் AIRCEL வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளுங்கள்… உடனடியாக FORWARD செய்யவும்.!

மதிப்பீடு

சுருக்கம்

ஏர்செல் நிறுவனம் அதிகப்படியான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது உண்மையெனினும், 28/2/2018 அன்று தனது சேவையை நிறுத்திவிடும் என்று எத்தகைய தகவல்களும் வெளியாகவில்லை.  ஏர்செல் தன் சேவையை நிறுத்திக் கொள்ளும்பட்சத்தில் அறிவிப்புகளை வெளியிடும்.

விளக்கம்

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜியோவின் இலவச அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவையின் வருகைக்கு பிறகு இந்தியாவில் பல டெலிகாம் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. அவற்றில் முதன்மையானது ஏர்செல்.

போட்டி நிறுவனங்களை சமாளிக்க முடியாமலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஏர்செல் நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை பிப்ரவரி 28-ம் தேதியோடு நிறுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் தற்போது மீளமுடியாத கடன் பிரச்சனையாலும், நஷ்டத்தாலும் தனது சேவையைத் தொடர முடியாத நிலைக்கு சென்றுள்ளது. 

2016-ம் ஆண்டு ஜியோவின் வருகைக்கு முன்பு 120 கோடி லாபத்துடன் இயங்கி வந்த ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது ஜியோவின் வருகைக்கு பின் மாதம் 2.5 மில்லியனாக குறையத் தொடங்கியது.

ஏர்செல் நிறுவனம் தாய் நிறுவனமான மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் கடன் சுமையில் இருந்த ஏர்செல் நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடர்வதற்கு ரூ.500 கோடி முதலீடுகளை செய்து வந்துள்ளார். எனினும், அதில் எத்தகைய பயனுமில்லை.

கடந்தாண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் நிறுவனத்தின் 15,000 கோடி கடன் சுமையை மறுசீரமைப்பு செய்வதற்கென, கடனளித்த நிறுவனத்திடம் ஏர்செல் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. எனவே, தொடர்ந்து வர்த்தகத்தை நடத்த ஏர்செல் நிறுவனத்திடம் நிதி ஆதாரமுமில்லை.

network tower

ஆக, ஓரிரு வாரங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதையும் நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5000 பணியாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், டவர் ஆப்ரேட்டர் போன்ற பலரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாதம் ரூ.400 கோடி வருமான ஈட்டும் ஏர்செல் நிறுவனம், 100 கோடியை பிற நிறுவனங்களின் அழைப்பு கட்டணம், 280 கோடி டவர் சேவைக்கும், மீதுள்ள தொகையை வரி மற்றும் கடனுக்கு வட்டி போன்றவற்றிக்கு செலுத்துகிறது. இதுவரை ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு 60 கோடி நிலுவையும், வங்கிகளின் கடனுக்கான வட்டியையும் செலுத்தவில்லை.

 தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCIT) அமைப்பிடம் ஏர்செல் நிறுவனம் வர்த்தகத்தை தொடர இயலாத காரணத்தினால் திவாலாக அறிவிக்குமாறு விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. எனவே, சில நாட்களுக்குள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். 

ஏர்செல் நிறுவனம் டெலிகாம் சேவையில் தன்னை போன்ற சூழ்நிலையில் இருந்த Reliance communication நிறுவனத்திடம் இணைவது குறித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அத்தகைய முயற்சியும் தோல்விலேயே முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏர்செல் நிறுவனம், நிதிப்பற்றாக்குறை காரணமாக 6 மாநிலங்களில் தன் சேவைகளை நிறுத்தியது. அதற்கு முன்பாகவே, ஜனவரி 30-ம் தேதியோடு 6 மாநிலங்களில் ஏர்செல் தனது சேவையை நிறுத்தவுள்ளது என்றும், மார்ச் மாதம் வரை வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை கடந்த டிசம்பரில் TRAI வெளியிட்டது.

ஆக, தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் தனது நெட்வொர்க் சேவையை நிறுத்தி கொள்வதற்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக அறிவிப்புகள் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், ஆங்காங்கே நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஏர்செல் நெட்வொர்க் பாதிப்பு குறித்து ஏர்செல் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு; Aircel வாடிக்கையாளரா நீங்கள் ? இதை செய்யுங்கள் 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader