This article is from Jan 13, 2018

கண்டெய்னர் முழுக்க உடல் உறுப்புகள் திருடப்பட்ட குழந்தைகள் பிணம் தமிழக போலீஸால் மீட்பா?

பரவிய செய்தி

தமிழ்நாடு போலீஸ் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்த குழந்தைகளை பிணமாக மீட்டுள்ளனர். வேற வேற நாட்டிலிருந்து கடத்தி வந்து உடல் உறுப்புக்களை எடுத்து விற்றுள்ளர்கள். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவும், குழந்தைகளை முன்னெச்சரிக்கையோடு களவானியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்….

மதிப்பீடு

சுருக்கம்

உண்மையில் இந்தப் புகைப்படம் சிரியா உள்நாட்டுப் போரில் நடந்த  பயங்கரம். இரசாயன குண்டுகளுக்கு பலியான குழந்தைகள்.

விளக்கம்

சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்நாட்டு ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் யுத்தம் புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதியில் ஏவப்பட்ட குண்டுகள் Ghouta என்ற பகுதியை தாக்கியதில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் பரிதாபமாக இருந்தனர், இதில் குழந்தைகளும், பெண்களும் அதிகளவில் இறந்துள்ளனர். 

இத்தகைய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து சோதித்த மருத்துவர்கள், இவை நச்சு வாயு உடையது என்றும், இதனால் மக்களுக்கு மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு, கண் எரிச்சல், கட்டிகள், உடலில் பிடிப்புகள் போன்றவை ஏற்படும் என்றும் கூறினர்.

இந்த இரசாயன குண்டுகளை சிரியா அரசின் படைகள் மற்றும் ரஷ்ய படைகளே பயன்படுத்தி இருக்க வேண்டும். எனவே சிரியா அரசே இத்தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்தது.இதன் பின்னர் 2013 ஆம் ஆண்டில் அசாத் தலைமையிலான அரசு தன்னிடம் உள்ள அனைத்து இரசாயன ஆயுதங்களையும் அழித்து விடுவதாகக் கூறியது. ஆனால், 2014-ம் ஆண்டில் தொடங்கி தற்போது வரை பல்வேறு இரசாயன ஆயுதத் தாக்குதலில் அரசு ஈடுபட்டு வருகிறது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் தலைதூக்கி உள்ளனர். மேலும், இந்த சண்டையால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இராணுவத்தினர், கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் சேர்த்து மூன்றரை லட்சம் பேர் இறந்துள்ளனர். சுமார் 70 லட்சம் அப்பாவி மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர்.

சிரியா தாக்குதலில் இறந்த குழந்தைகளின் உடல்களின் படங்களை, தமிழ்நாடு போலீசால் பிடிக்கப்பட்ட கண்டெய்னரில் இருந்த குழந்தைகள் என்று கூறி தொடர்ந்து வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader