கேரள அரசுப் பள்ளி பாடப் புத்தகத்தில் மத ரீதியான பாகுபாட்டுடன் பாடம் இருப்பதாகப் பொய் பரப்பும் வலதுசாரிகள்!
பரவிய செய்தி
முஸ்லிம் அஸ்லாம்: சுகாதாரமான முறையில் பொருட்களை விற்பனை செய்கிறார். நாம் அவரது கடையிலிருந்து இனிப்புகளை வாங்க வேண்டும்.
இந்து அப்பன்: சுகாதாரமற்றவர், இவரது கடையில் இனிப்புகளை யாரும் வாங்க வேண்டாம்.
முஸ்லிம் ஆதில்: சுகாதாரமான நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்.
இந்து அபிமன்யு: சுகாதாரமற்றவர், குளிக்க மாட்டார், துர்நாற்றம் வீசும்.
இதைத்தான் கேரள அரசுப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. சிறு குழந்தைகளை மூளைச் சலவை செய்வது இப்படித்தான்.
மதிப்பீடு
விளக்கம்
கேரளா அரசுப் பள்ளி பாடப் புத்தகத்தில் முஸ்லிம்களைச் சுத்தமானவர்களாகவும் இந்துக்களை அசுத்தமானவர்களாகவும் சித்தரித்து பாடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரப்பப்படுகிறது.
-MusIim Aslam : Hygienic, we should buy sweets from his shop
-Hindu Appan : Unhygienic, nobody should buy his sweets-Muslim Adil : Hygienic & has good habits
-Hindu Abhimanyu : Unhygienic, never takes bath, smells badThis is what Kerala govt is teaching in their schools…..… pic.twitter.com/ueRBegzBlP
— Mr Sinha (Modi’s family) (@MrSinha_) April 6, 2024
அப்படத்தில், இனிப்பு கடை வைத்துள்ள அஸ்லாம் என்ற முஸ்லிம் சுத்தமான முறையில் விற்பனை செய்வதாகவும் அப்பன் என்ற இந்து அசுத்தமான முறையில் விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு படத்தில் ஆதில் என்ற சிறுவன் குளித்து சுத்தமாக இருப்பதாகவும் அபிமன்யு என்ற சிறுவன் குளிக்காமல் அசுத்தமாக இருப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இப்படம் 2021ம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதைக் காண முடிந்தது.
தற்போது மீண்டும் அப்படம் கேரள அரசுப் பள்ளி பாடப் புத்தகம் எனப் பரவியதையடுத்து, அம்மாநில கல்வி அமைச்சர் விளக்கம் அளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
This book is not published by the Kerala Govt’s Education Dept. Merely another endeavor to incite animosity towards the state. Those acquainted with us understand the camaraderie & unity among Keralites. No room for hatred – precisely why communal agenda fails to take root here. https://t.co/AinoT3GvBA pic.twitter.com/eIG1qEoYdI
— V. Sivankutty (@VSivankuttyCPIM) April 9, 2024
அதில், ’இப்புத்தகம் கேரள அரசின் கல்வித் துறையால் வெளியிடப்படவில்லை. இது மாநிலத்தின் மீது பகைமையைத் தூண்டும் மற்றொரு முயற்சி. கேரள மக்களிடையே உள்ள தோழமையையும் ஒற்றுமையையும் எங்களுடன் பழகியவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இங்கு வெறுப்புக்கு இடமில்லை’ எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேற்கொண்டு தேடியதில், இதே போன்று மத ரீதியாக பாகுபாட்டுடன் 2016ம் ஆண்டு ஒரு புத்தகத்தின் பக்கம் பரவியுள்ளது. அது தொடர்பாக ‘தி நியூஸ் மினிட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டு பரவிய படத்தில் ’உங்கள் நண்பர் முஸ்லிமாக மாற முடிவு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?’ என்ற கேள்வி உள்ளது. இதற்கு ‘பெயர் மாற்றம், ஹலால் உணவை உண்ணக் கூறுவேன்’ என்பது போன்ற பதில்கள் இடம் பெற்றுள்ளன.
’பீஸ் இண்டெர்நேஷ்னல்’ (Peace International School) என்னும் பள்ளி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ளது. இப்பள்ளியில் இது போன்று மத ரீதியான பாகுபாட்டுடன் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக 2016, அக்டோபர் மாதம் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அம்மாநில காவல்துறையும் பள்ளி பாடத்திட்டக் குழுவும் அப்புத்தகங்களை ஆய்வு செய்து, அதில் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் அப்புத்தகங்கள் மாநில பள்ளி பாடத்திட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டவை அல்ல என்கிற விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி NCERT, CBSE, SCERT என எந்த பாடத்திட்டத்தையும் பின்பற்றாமல் தனியாக ஒரு பாடத்திட்டத்தைப் பின்பற்றியுள்ளது.
இது தொடர்பாக 2016, டிசம்பர் மாதம் மும்பையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பள்ளியின் உரிமம் 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது பரவக் கூடிய படம் அப்பள்ளி பாடப் புத்தகமா என்பதை அறிய முடியவில்லை. நாங்கள் கண்டறியும் பட்சத்தில் இக்கட்டுரையில் கூடுதல் தகவலாக இணைக்கிறோம். ஆனால், அது கேரள அரசுப் பள்ளியின் பாடப் புத்தகம் அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
கேரள அரசுப் பள்ளி பாடப் புத்தகத்தில் மத ரீதியாகப் பாகுபாட்டுடன் பாடம் அமைந்துள்ளதாக வலதுசாரிகள் பரப்பும் தகவல் உண்மை அல்ல.