கைரேகை வடிவில் கட்டிடங்களா ?
பரவிய செய்தி
தாய்லாந்தில் காணப்படும் கைரேகை வடிவக் கட்டிடங்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
கைரேகை வடிவில் எந்தவொரு கட்டிடங்களும் தாய்லாந்தில் இல்லை. இவை அனைத்தும் விளம்பர நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் படங்கள் ஆகும்.
விளக்கம்
உலகின் பல நாடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருவதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தாய்லாந்தில் இருக்கும் கைரேகை வடிவிலான கட்டிடங்கள் எனக் கூறிக் காணப்பட்ட படங்கள், தொழிநுட்பத்தின் மிகப்பெரிய வளர்ச்சி என்றுக் கூறி மிகவும் பிரபலமாக பேசப்பட்டன. ஆகையால், கைரேகை வடிவில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் எனக் கூறிப் பல ஆண்டுகளாக சமுக வலைதளங்களில் இப்படங்கள் அதிகளவில் பரவிக் காணப்படுகின்றன. எனினும், இப்படத்தின் உண்மைநிலை அறியாமல் மக்கள் இதை பகிரவும் செய்கின்றனர்.
வானில் இருந்து பார்க்கும் போது இக்கட்டிடமானது கைரேகை வடிவில் காட்சியளிப்பது போன்று அப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்படங்கள் அனைத்தும் உண்மையல்லவே. ஆம், தாய்லாந்து நாட்டில் கைரேகை வடிவில் எந்தவொரு கட்டிடமும் இல்லை. அப்படியென்றால், இப்படங்கள் அனைத்தும் என்ன என்று ஆராய்ந்த போது தான் தெரியவந்தது, இப்படங்கள் யாவும் ஒரு விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் வேலைபாடுகள் ஆகும்.
தாய்லாந்து நாட்டின் கைரேகை பாதுகாப்பு மென்பொருளை உருவாக்கும் அமைப்பின் விளம்பர நிறுவனமான spicyH மூலம் பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட படங்கள் ஆகும். 2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்கால கட்டிடக்கலையை இப்படங்கள் விவரித்ததாக கூறுகின்றனர். கைரேகை வடிவக் கட்டிட படங்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் சமூக வலைதளங்களில் உண்மையான கட்டிடங்கள் என்று நம்பப்படுகின்றன. அவ்வாறு நம்பிக்கை கொண்டவர்கள் இப்படங்களை உற்றுப்பார்த்தால், அப்படத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் கார்ட்டூன் என்பதை அறியலாம்.
மென்பொருள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த படங்கள் இணையங்களில் மட்டுமே விளம்பரமாக பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆனால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே சிலர் இப்படங்களை பயன்படுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர்.