சென்னை சிறந்த படைப்பாற்றல் கொண்ட நகரம்-யுனெஸ்கோ
பரவிய செய்தி
யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்புகளுக்கான நகரங்களின் பட்டியலின் இசைப் பிரிவில் சென்னையை தேர்வுச் செய்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
உலகில் சிறந்த படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் 64 நகரங்களை “யுனெஸ்கோ அமைப்பு” இணைத்துள்ளது. அதில், சிறந்த இசைப் படைப்புகளுக்கான பிரிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னை சேர்க்கப்பட்டுள்ளது.
விளக்கம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான “யுனெஸ்கோ அமைப்பு” 2004 ஆம் ஆண்டில் இருந்து உலகில் உள்ள சிறந்த படைப்பாற்றல் கொண்ட நகரங்களை தேர்வு செய்து அங்கீகாரம் அளித்து வருகிறது. இதில், கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள், நகர வடிவமைப்பு, கேஸ்ட்ரானமி, திரைப்படம், இலக்கியம், ஊடகக்கலை மற்றும் இசை போன்ற ஏழு பிரிவுகளில் சிறப்பான படைப்பாற்றலை கொடுக்கும் நகரங்களை “ creative cities ” என்ற புனைப் பெயரை வழங்கி கௌரவித்து வருகின்றது.
இந்நிலையில், இவ்வருடம் இந்த ஏழு பிரிவுகளின் அடிப்படையாகக் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 64 நகரங்களை சிறந்த படைப்பாற்றல் கொண்ட நகரங்களாக தேர்ந்தெடுத்துள்ளது. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தச் சென்னை நகரமும் இடம்பெற்றுள்ளது.
சிறந்த இசைப் படைப்புகளுக்கு முக்கியப் பங்களிப்பை அளித்து வருவதாகச் சென்னையை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள் கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கலாச்சாரத்தோடு ஒன்றிய நகர்ப்புற அரசியல் போன்றவற்றிலும் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும்.
ஆகையால், கலாச்சாரத்தோடு ஒன்றியச் சென்னையை இசை படைப்பாற்றல் கொண்ட நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.