நார்வே நாட்டின் துணை மேயரான ஈழத்தமிழ் பெண்.
பரவிய செய்தி
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடான நார்வே. இதன் தலைநகரான ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார் ஒரு தமிழ் சகோதரி.. வாழ்த்துக்கள் சகோதரி கம்சாயினி
மதிப்பீடு
சுருக்கம்
2015-ம் ஆண்டு நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக ஈழத்தமிழ் பெண் கம்சாஜினி தேர்வாகினார்.
விளக்கம்
நார்வே நாட்டில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஈழத்தமிழ்பெண்ணான கம்சாஜினி குணரட்ணம் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
ஒஸ்லோ மாநகர தொழிலாளர் கட்சியின் துணை தலைவரும், இளைஞர் பிரிவின் தலைவராகவும் இருந்த கம்சாஜினி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.
இந்த வெற்றியின் பயனாக கம்சாஜினி குணரட்ணம் தனது 27-வது வயதிலேயே ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இலங்கையில் பிறந்த கம்சாயினி குணரட்ணம் 3 வயதில் பெற்றோருடன் அகதியாக நார்வே நாட்டிற்கு வந்துள்ளார்.
கம்சாஜினி குடும்பம் வடக்கு நார்வேவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒஸ்லோ நகருக்கு அவர்களது குடும்பம் இடம்பெயர்ந்த பிறகு, கம்சாஜினி தனது சகோதரர் உடன் தமிழ் பள்ளியில் பயின்றுள்ளார். பின் நாளில், ஒஸ்லோ தமிழ் இளைஞர்கள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2011 ஆம் ஆண்டில் Utoeya தீவில் நடைபெற்ற தொழிலார்கள் கட்சியின் இளைஞர்கள் மாநாட்டில் கம்சாஜினி கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அண்டேர்ஸ் ப்ரிவிக் என்பர் திடீரென நடத்திய தீவிரவாத தாக்குதலில் 69 பேர் சுட்டு கொல்லப்பட்டனர், வெடிகுண்டில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள கம்சாஜினி அங்கிருந்த Tyrifjorden என்ற ஏரியில் குதித்து 500 மீட்டர் நீந்தி உயிர் பிழைத்தார்.
ஒஸ்லோவின் துணை மேயர் பதவி தனக்கு எதிர்பாராமல் கிடைத்தது. எனது லட்சியம், “ எதற்காக யாரெல்லாம் தற்போது போது வரை மனதில் இருப்பதை கூறாமல், கூற முடியாமல் உள்ளனரோ அதற்காக குரல் கொடுப்பேன் ” என்று பத்திரிகை ஒன்றிற்கு கம்சாஜினி பேட்டி அளித்துள்ளார்.