நேதாஜியை போர் குற்றவாளி என கூறும் நேருவின் கடிதம், உண்மை என்ன?
பரவிய செய்தி
பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதத்தில் நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
நேதாஜி பற்றி தவறாக குறிப்பிட்டிருப்பதாகப் பரவும் நேருவின் கடிதம் போலியானது .
விளக்கம்
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பல ஆண்டுகளாக நேதாஜியின் மரணம் பற்றியும், அவரை பற்றிய ஆவணங்கள் ஏதும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இன்று வரை அவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகள் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு நேதாஜியின் 120-வது பிறந்தநாள் அன்று, நேதாஜி குறித்து தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
அவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களில் 1945-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிரிட்டன் அரசுக்கு எழுதிய கடித்தில், நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார் என்று சர்ச்சைகள் கிளம்பின.
டிசம்பர் 26, 1945-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்ட கடிதத்தில், “உங்களின் போர் குற்றவாளி “சுபாஷ் சந்திர போஸ்” ரஷ்யாவிற்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார். ரஷ்யா எப்பொழுதும் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் ” என்று எழுதப்பட்டிருக்கும்.
இது குறித்து மிகச்சிறந்த இந்திய வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா கூறுகையில், “இக்கடிதங்கள் இந்திய சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதற்கு முன்பு வரை போலியானவையா என்று உறுதி செய்ய முடியவில்லை”என்று கூறியிருந்தார்.
நேருவின் கடிதம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய கடிதத்தில் இருக்கும் பல்வேறு தவறுகள்:
- கிளெமென்ட் அட்லீ 1945-ல் பிரிட்டன் அரசின் பிரதமர், இங்கிலாந்து இல்லை.
- பிரிட்டிஷ் பிரதமர் அதிகாரப்பூர்வ அலுவலகம் 10, Down street இல்லை, 10, Downing street ஆகும்.
- ஜோசப் ஸ்டாலின் ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் (USSR) தலைவர், ரஷ்யா அல்ல.
- 1945-ல் சோவியத் யூனியனிடம், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்காவுக்கு நட்புறவு இல்லை.
அக்கடிதத்தில் நேருவின் கையொப்பம் இல்லாமல், பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அக்கடிதத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
மறைந்த இந்திய பிரதமர் நேரு பிரிட்டன் அரசுக்கு நேதாஜி குறித்து தவறாக எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானவை என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
நேதாஜி பற்றி உண்மை நிலை , அவர் மீது நேரு நிலைப்பாடு என்ன என பல சந்தேகம் இருந்தாலும் , இந்த கடிதம் போலியானது.