This article is from Jan 24, 2018

பாகிஸ்தான் அரசின் ஆர்டரை ரத்தன் டாடா நிராகரித்தாரா ?

பரவிய செய்தி

380 டாடா சுமோ கார்களை வாங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அணுகியது பாகிஸ்தான் அரசு. ஆனால், அதற்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

அவ்வாறு எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை என்று கூறியது டாடா நிறுவனம்.

விளக்கம்

இந்திய வர்த்தகத்தில் டாடா குழுமத்திற்கு என்று ஒரு தனி அடையாளம் உண்டு. மேலும், இந்திய ஆட்டோமொபைல் துறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க காரணமானவர் அந்நிறுவனத்தின் தலைவர் திரு.ரத்தன் டாடா.

டாடா என்று கூறினாலே பெரும்பாலானவர்களுக்கு நினைவிற்கு வருவது டாடா சுமோ கார்கள் தான். இந்தியாவில் பல மாநிலங்களில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கென டாடா சுமோ கார்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகன வர்த்தகத்தை விரிவுப்படுத்தியும் உள்ளனர்.

 2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள காவல்துறையின் பயன்பாட்டிற்கென 380 டாடா சுமோ கிராண்டே ரக வாகனங்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் அரசு டாடா மோட்டார்ஸை அணுகியதாகவும், அதற்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்தார்  என்று செய்திகள் பரவி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இச்செய்தியை பற்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியதாவது, “ இது தவறான செய்தி ஆகும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தகத்தில், பாகிஸ்தானில் இருந்து எங்கள் நிறுவனத்திடம் எந்தவொரு ஆர்டரும் வரவில்லை. ஆட்டோமொபைல்ஸ் வரையறுக்கப்பட்ட ஒன்று ” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகள் பரவிய காலகட்டத்தில் “ பாரத் ஆட்டோ ” என்ற இணையதளம், டாடா மோட்டார்ஸ் பாகிஸ்தானுக்கு வாகனங்கள் வழங்க மறுத்ததாகக் கூறி ஓர் கட்டுரையை வெளியிட்டது. டாடா மோட்டார்ஸ் மறுப்பு தெரிவித்த பின்னர் ஆகஸ்ட் 8, 2012-ல் தவறான செய்தியைக் கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தனது இணையதளத்தில் மறுப்பு கட்டுரை வெளியிட்டனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து எந்தவொரு ஆர்டரும் வரவில்லை என்று கூறியதில் இருந்து இது மீண்டும் மீண்டும் பரவத் தொடங்கிய வதந்தி என்பதை அறியலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader