மத்தியப் பிரதேசத்தில் போலியான நபரை வைத்து பாத பூஜை செய்ததாகப் பரவும் பொய் செய்தி!

பரவிய செய்தி

போலி நபரை வைத்து நாடகமாடிய பா.ஜ.க! மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ-வின் உதவியாளர் பர்வேஷ் சுக்லா, பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது ‘The Quint’ செய்தியாளர் நடத்திய விசாரணையின் மூலம் அம்பலம்!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் தஸ்மத் ராவத் என்ற பழங்குடியினர் மீது பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து  குற்றம் செய்தவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டம் 294 (பிறருக்குத் தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தஸ்மத் ராவத் என்பவரை அழைத்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கால்களைக் கழுவினார். இந்நிலையில் போலி நபரை வைத்து நாடகமாடிய பா.ஜ.க!’ என்ற தலைப்பில் கலைஞர் செய்திகள் நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

Archive link

அதில், ‘பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவத்தில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது ‘The Quint’ செய்தியாளர் நடத்திய விசாரணையின் மூலம் அம்பலம்’ என்றுள்ளது. இதனை திமுக-வினர் பலரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பரப்பி வருகின்றனர். மேலும் வெளிச்சம் டிவி இதே போன்ற நியூஸ் கார்டினை பதிவிட்டுள்ளது.

Archive link 

உண்மை என்ன? 

பாதிக்கப்பட்டவருக்குப் பதிலாக வேறொரு நபரை அழைத்து வந்து மத்திய பிரதேஷ் முதலைச்சர் கால்களைக் கழுவியதாகப் பரவும் செய்தி குறித்து கலைஞர் செய்தி தளங்களில் தேடினோம். பரவக் கூடிய நியூஸ் கார்டு மட்டுமின்றி ‘“நான் பாதிக்கப்பட்ட நபர் இல்ல”: சிறுநீர் கழித்த விவகாரத்தில் போலி நபரை வைத்து நாடகமாடிய பாஜக; உண்மை என்ன?’ என்ற தலைப்பில் செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘The Quint’ செய்தியாளர் நடத்திய விசாரணை என விஷ்ணுகாந்த் என்பவரின் பதிவு இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் செய்திருந்த மூன்று பதிவுகளில் என்ன குறிப்பிட்டு உள்ளார் என்பதை முழுமையாக உள்வாங்காமல், கலைஞர் செய்தி தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பதிவில், அன்றிரவு தான் மதுபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என ஞாபகம் இல்லை. அதனால்தான் அந்த வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை எனச் சொன்னதாக தஸ்மத் ராவத் கூறியதை விஷ்ணுகாந்த் குறிப்பிட்டுள்ளார்.  

அடுத்த பதிவில், மது போதையில் இருந்ததால் தனக்கு நினைவில்லை என தஷ்மத் முதலில் கூறினார். ஆனால், சிறுநீர் கழித்தது தொடர்பான குற்றத்தை பிரவேஷ் காவல் நிலையத்தில் ஒப்புக் கொண்டார் என்று விஷ்ணு பதிவிட்டுள்ளார்.

Archive link

கடைசியாக தஸ்மத் ராவத் மனைவி பேசிய வீடியோவினையும் பதிவு செய்துள்ளார். அதில், ‘வீடியோவில் இருப்பது தனது கணவர் தஷ்மத் என அவரது மனைவி அடையாளம் கூறியுள்ளார். தஸ்மத்தின் ஆடைகளை வைத்து அவர் அடையாளம் காட்டினார். மேலும், ஒரு மாதத்திற்கு முன்னர் அவரது உறவினர் ஒருவர் (aunt) இறந்து விட்டதையடுத்து மொட்டை அடித்ததினால் அவரது தலைமுடி குட்டையாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு இத்தகைய விளக்கம் அளிப்பதற்கு முன்னர், சிறுநீர் கழித்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் தான் இல்லையென தஷ்மத் கூறிய வீடியோ ஒன்றினை மத்திய பிரதேஷ் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அது தவறானது என்பதை விளக்கும் நோக்கத்துடன் தஷ்மத்தின் மனைவியின் விளக்க வீடியோவினை விஷ்ணு பதிவிட்டுள்ளார். 

Archive link 

காங்கிரஸ் பரப்பிய தவறான செய்திக்கு விளக்கம் அளித்து விஷ்ணு வீடியோ பதிவிட்டுள்ளார். ஆனால், விஷ்ணுவின் பதிவையே மேற்கோள் காட்டி கலைஞர் செய்திகள் தவறான செய்தி வெளியிட்டுள்ளது.

தஸ்மத் ராவத் இப்படி மாறுபட்ட கருத்தினை தெரிவிப்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தேவை என விஷ்ணுவிடம் கூறியுள்ளார். அன்றைய தினமே தன் மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘பண்டிட்’ பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். இத்தகைய மாறுபட்ட கருத்துகளுக்கு அரசியல் அழுத்தமே காரணம் என அந்த இரண்டு வீடியோக்களையும் விஷ்ணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Archive link  

இதே போல் இச்சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது, சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தினை கூறுகின்றனர். ஆனால், இது 2020ம் ஆண்டு நடந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சித்தி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு சொன்ன பொய் !

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பர்வேஷ் சுக்லா என்ற நபர் பாஜக உறுப்பினர் இல்லை என குஷ்பு முதற்கொண்டு பல்வேறு பாஜகவினரும் கூறிவந்த நிலையில், அவர் பாஜக உறுப்பினர் என்பதை ஆதாரங்களுடன் யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களைக் கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என ‘The Quint’ செய்தியாளர் நடத்திய விசாரணையின் தெரிய வந்ததாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அப்படிப் பரவிய செய்தி தவறானது என்றே அவர் விளக்க வீடியோவினை வெளியிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader